களைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு
சென்னை: வீட்டுப் பொங்கல், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து இன்று வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு காணும் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை மெரினா, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் போன்ற இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் அங்கு சிறப்பு கேமராக்களை கொண்டு போலீஸ் கண்காணித்து வருகிறது.
அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை.. விசாரணைக்கு தயாராகும் செனட் சபை.. கொதிக்கும் டிரம்ப்
களைகட்டியது
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கமான உற்சாகத்துடன் அதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் காலை முதலே களை கட்டி காணப்படுகின்றன. குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உயிரியல் பூங்கா
சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரைக்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பும் செய்கின்றனர்.
ட்ரோன்
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை தொடங்கி கலங்கரை விளக்கு வரை உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடி பைனாகுலர் உதவியுடன் போலீஸார் நோட்டமிட்டு வருகின்றனர். குழந்தைகளை அழைத்து வருவோர் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சுற்றுலா இடங்கள்
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு, தஞ்சை பெரிய கோவில், ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம், என பல சுற்றுலா இடங்களுக்கும் காணும் பொங்கலை கொண்டாட மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.