24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து 10 இடங்களில் பெண்களிடம் செயின் பறித்த குற்றசம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை சீத்தையம்மாள் காலனியில் நடந்து சென்ற பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் பறித்து னெ்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத பெண் கீழே விழுந்து படுகாயடைந்தார் இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இருசக்கர வாகனத்தை இயக்கியவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். ஆனால் பின்னால் அமர்ந்து செயினை பறித்தவனோ, முகத்தை மறைக்காமல் தைரியமாக செயினை பறித்து சென்றான்.
இதே போல கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் சென்ற செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க முயன்றுள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள். நீண்ட நேரம் போராடியும் நகையை பறிக்க முடியாததால், செல்வியை ஆத்திரம் தீர சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
கோட்டூர்புரத்தோடு முடிந்துவிடவில்லை செயின் பறிப்பு நிகழ்வுகள். ராயப்பே்டையில் ஜெயலட்சுமி, திருவல்லிக்கேணியில் சுதாதேவி, மயிலாபூரில் சாந்தா, பள்ளிக்கரணையில் பாலம்மாள், எழும்பூரில் மேரி, தேனாம்பேட்டையில் கற்பகமணி, கொடுங்கையூரில் ரமணி, ஆதம்பாக்கத்தில் முத்துலெட்சுமி, திருமங்கலத்தில் கற்பகமணி என 24 மணி நேரத்தில் சென்னையில் 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த செயின் பறிப்பு சம்பவங்களில் அடுத்தடுத்து ஒரே கும்பலே 4 இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், நகை கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் ஏதுமின்றி சென்னை காணப்பட்டது. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து முத்தாய்ப்பாக, ஒரே நாளில் 10 பெண்களிடம் செயின்களை பறித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனனர் கொள்ளையர்கள்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் அமைதி பூங்கா, சிங்கார சென்னை என்று அரசு கூறும் தலைநகரின் பிரதான சாலைகளில், அதுவும் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.