தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யுமாம்.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கத்தரி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரத்தில் சில மாவட்டங்களில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து கொளுத்தும் வெயிலுக்கு இதமளிக்கிறது.
ஆனால் கடுமையான வெப்பமும் தண்ணீர் பஞ்சமும் நீடிக்கும் சென்னையில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சர்ச்சைப் பேச்சு.. 2 நாள் லீவுக்கு பிறகு இன்று மீண்டும் பிரச்சாரம் செய்கிறார் கமல்!
இடியுடன் கனமழை
இந்நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை வரை
40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சனிக்கிழமை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேகமூட்டம்
அதே நேரத்தில் மழை பெய்யாத இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பபட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருத்தணியில் அதிகம்
இதனிடையே தமிழகத்தில் நேற்று 12 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.