10 மருத்துவமனைகள், 12 கல்லூரிகள்.. விதிமீறலில் ஈடுபட்ட 2,000 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நோட்டீஸ்
சென்னை: தலைநகர் சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2,000 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 10 மருத்துவமனைகள் மற்றும் 12 கல்லூரிகள் அடக்கம் என்பது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
அதிகாரிகளின் நடவடிக்கையால் கிழக்கு கடற்கரையை ஆக்கிரமித்து சொகுசு பங்களாக்கள் கட்டியுள்ளோருக்கும் சிக்கல் வலுக்கிறது. அனுமதிக்கப்பட்டதற்கு கூடுதலாகவும், விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாகவும் கட்டப்படும் கட்டிடங்கள் என்றைக்குமே ஆபத்தானவை தான். சென்னை தி நகரில் தீக்கிரையான சென்னை சில்க்ஸ், மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடம் போன்ற பல சம்பவங்கள் இதற்கு சாட்சியாக நம் முன்னே உள்ளன.
ஆனாலும் தலைநகர் சென்னையில் விதிமீறல் என்பது தொடர்ந்த கொண்டு தான் உள்ளது. தற்போது விதிகளை மீறி கட்டடங்களை கட்டியுள்ள 10 மருத்துவமனைகள், 12 கல்லூரிகள் உட்பட 2,000 நிறுவனங்களை மூடி சீல் வைக்க சிம்டிஏ மற்றும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனாலும் மேல்நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர் சமூக ஆர்வலர்கள். கட்டிட விதிமீறல் குறித்து தகவல் தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், முன்பெல்லாம் அனுமதித்ததை விட கூடுதலாக கட்டப்பட்டிருக்கும் தளங்களை தான் இடித்தார்கள். ஆனால் தற்போது அப்படி அல்ல.
அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு தளம் கட்டியிருந்தால் கூட, அஸ்திவாரத்திலிருந்தே இடிக்க கறாராக சொல்லுகிறது நீதிமன்றம். மேலும் விதிமீறலில் ஈடுபட்டுள்ள கட்டிடத்திற்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பை முதலில் துண்டிக்க சொல்லுகிறது என்றார்.
நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் திருவான்மயூர் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 2,000 கட்டிடம் மற்றும் வீடுகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல சொகுசு பங்களா வீடுகளும் அடக்கம் என கூறப்படுகிறது.
அமைந்தகரையில் செயல்படும் 8 மாடி தனியார் மருத்துவமனையும் இந்த விதி மீறல் பட்டியலில் அடக்கம் என்பது தான் பெரும் அதிர்ச்சி. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக கட்டிய அந்த மருத்துவமனையின் 5 மாடிகளை இடித்து தள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது போல எண்ணற்ற பல முக்கிய விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தலைநகரில் உள்ளன. அவற்றினை முழுவதுமாக கண்டறியாமல் அதிகாரிகள்மெத்தனமாக செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது.
நடவடிக்கைக்குள்ளாகும் விதிமீறல் கட்டிடங்களின் உரிமையாளர்கள் அதிகாரிகளை பணத்தாசை காட்டி வளைப்பது ஒரு பக்கம் என்றால், நீதிமன்றத்தில் வழக்கு பின்னர் மேல்முறையீடு என இழுத்தடிக்கவும் தயங்குவதில்லை. கட்டிட விதிமீறல்களை ஒழுங்காக கண்காணித்து உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பது ஒன்றே, இதற்கு சரியான தீர்வு என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.