டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா தப்ப முயன்ற 10 பேர் கைது.. சென்னை ஏர்போர்டில் பரபரப்பு
சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து, சோதனைக்கும் உட்படுத்தி கொள்ளாமல் மலேசியாவுக்கு விமானம் மூலம் தப்ப முயன்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். அவர்கள் மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்..
Recommended Video
கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த பலர் ஊர் திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து மலேசிய அரசு இந்திய அரசிடம் பேசி சிறப்பு விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது. இதுவரையில் 8 சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1500க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சென்னையில் இருந்து மலேசியா சென்றுள்ளனர்.
137 மலேசியர்கள்
இந்நிலையில் நேற்று காலை 10.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பாடிக் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் புறப்பட தயாரானது. இதில் தமிழகத்தில் தங்கியிருந்த 137 மலேசியர்கள் செல்ல தயாராக இருந்தனர்.இவர்களில் 127 பேரை மலேசிய தூதராக அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
10 பேர் சிக்கினர்
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை , சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. மீதமுள்ள 10 மலேசியர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றுள்ளார்கள். அங்கிருந்து தென்காசி சென்று உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
அதிகாரிகள் கண்டுபிடிப்பு
இதனிடையே மலேசிய அரசு சிறப்பு விமானம் மூலம் தமிழகத்தில் தவிப்பர்களை அழைத்து செல்வதை அவர்கள் கேள்விப்பட்டனர். உடனே சென்னையில் உள்ள மலேசிய துணை தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் 10 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்துவிட்டனர். எனினும் விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் 10 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதை கண்டுபிடித்தனர்.
தப்ப முயன்றனர்
இதையடுத்து குயுரிமை அதிகாரிகள் அந்த 10 பேரின் மலேசிய பயணத்தை ரத்து செய்தனர். மீதமுள்ள 127 பயணிகளுடன் சிறப்பு தனி விமானம் நேற்று காலை 11.30 மணிக்கு மலேசியா புறப்பட்டு சென்றனர். தமிழக அரசு பலமுறை அறிவுறுத்தியும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இந்த 10 பேரும் சோதனைக்குஉட்படுத்தாமல் மலேசியாவுக்கு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
8 பிரிவுகளில் கைது
10 பேர் மீதும் போலீசார் 8 பிரிவுகளில் ( அரசு உத்தரவை மீறுதல், உயிர்கொல்லி தொற்று நோயை பரப்புதல், வெளிநாட்டவர் தடையை மீறி தங்குதல் தடுப்பு சட்டபிரிவு உள்பட) வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான 10 பேரும் பூந்தமல்லி கொரோனா சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே 10 பேர் யார் யாரை சந்தித்தார்கள். எங்கு தங்கியிருந்தார்கள் என்ற தகவலை தென்காசி மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.