ஏற்கனவே கட்டி உருளுவார்கள்.. இப்போது 10 சீட்டுக்கு என்னவெல்லாம் நடக்க போகுதோ காங்கிரஸில்
10 சீட்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் அதை எப்படி பிரித்து கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: 10 தொகுதி வாங்கியாச்சு சரி.. ஆனால் இதை யாருக்குன்னு பிரிச்சு தரப்போகுது காங்கிரஸ் என்பதுதான் கேள்வி!
மாநிலத்தில் இருக்கிற கட்சிகளிலேயே எக்கச்சக்க கோஷ்டி சண்டை இருப்பது தமிழக காங்கிரசில்தான். எப்பவுமே கோஷ்டி பூசல், எப்பவுமே தகராறு, எப்பவுமே உட்கட்சி விவகாரம் என நீண்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்சனையை மட்டும் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் அப்போதிருந்தே தீர்க்கப்படாமலேயே உள்ளது.
திருநாவுக்கரசர் அணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் அணி, சிதம்பரம் அணி, தங்கபாலு அணி என தனித்தனி அணிகளும், அவர்களுக்குள்ளே கோஷ்டி பூசல்களும் நிலவி வருகிறது.
கட்டி புரளுவார்கள்
இவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை கட்சியில் பொறுப்பாளர்களாக நியமிப்பது, பிறகு வேண்டாதவர்களை நீக்குவது, நீக்கப்பட்ட அணியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்குவது, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் முறையிடுவது பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டு வருபவர்கள். கடந்த காலங்களில் சத்திய மூர்த்தி பவனில் கட்டி புரண்டு உருண்டு எழுந்த கதை தமிழகமே அறியும்.
போட்டியிட ஆர்வம்
இப்போது விஷயம் என்னவென்றால், தமிழக காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவருமே இந்த முறைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பதுதான். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கோஷ்டியும் காங்கிரஸ் மேலிடத்திடம் கடந்த சில நாட்களாகவே சீட் கேட்டு வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
உடன்பாடு
கடைசியில் 10 சீட் என்று முடிவாகி இருக்கிறது. இதில் பாண்டிச்சேரியை விட்டுவிடுவோம். மற்ற 9 சீட்டுகளை எடுத்து கொண்டால் யாருக்கென்று தருவார்கள். நேற்றிரவு கையெழுத்தான இந்த உடன்பாட்டின் மூலம் ஸ்டாலின் ஒன்றும் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை. டெல்லியில் இருந்து பெரிய தலைகளை தமிழகத்துக்கு வரவழைத்து எடப்பாடி 5 மட்டுமே கொடுத்து கெத் காட்டினார்.
இளங்கோவன்
ஆனால் இவ்வளவு நாள் கூடவே இருக்கும் ஒரு கட்சிக்கு 10 கொடுத்து ஒரு கையெழுத்து மட்டுமே போட்டு முடித்துள்ளார் ஸ்டாலின். இருந்தாலும் இந்த 9 சீட்கள் யாருக்கு என்று கொடுப்பார்கள். இளங்கோவனும், திருநாவுக்கரசரும் கண்டிப்பாக ஆளுக்கொன்று எடுத்து கொள்வார்கள். அதேபோல தான் ப.சிதம்பரம் கேட்கிறாரோ இல்லையோ, விசுவாசத்தை காட்ட கண்டிப்பாக முயல்வார் கே.எஸ்.அழகிரி.
நெட்டிசன்கள்
அதனால் கோஷ்டிக்கு ஒரு சீட் என்றாலும் இந்த 9 சீட் பத்தாமல்தான் போகும் என தெரிகிறது. ஏற்கனவே கட்டி உருளுவார்கள், இப்போது இந்த காங்கிரஸ் கோஷ்டி என்ன செய்ய போகிறதோ என்று நெட்டிசன்கள் சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.