அடப் பரிதாபமே… க.அன்பழகன் வீட்டில் 10 சவரன் நகை திருட்டு… போலீசார் விசாரணை
சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்தில் 10 சவரன் நகை மாயமாகியிருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகனின் இல்லம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. வயது முதிர்வால் அவதிப்பட்டு வரும் அவர், அந்த வீட்டில் தான் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந் நிலையில், அன்பழகனின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன்னர் 8 சவரன் மதிப்புள்ள 4 வளையல்கள் மற்றும் 2 சவரன் மதிப்புள்ள 1 பிரேஸ்லெட் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகியுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலக குடியிருப்பு போலீசாரிடம் அன்பழகனின் உதவியாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் பணிபுரியும் வில்லிவாக்கம் பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நளினி என்னும் பெண், வீட்டில் நகை மாயமான நாளில் இருந்து பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நளினியிடம் தலைமை செயலக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.