100 நாட்களை தாண்டிய ப சிதம்பரத்தின் கைது. இதுவரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?
சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் 100 நாட்களுக்கும் மேலாக இருக்கிறார் ப. சிதம்பரம். இந்த 100 நாட்களில் சிதம்பரத்தின் மீதான எத்தனை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயும் கட்டுரை ஒன்றை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.
The Wireல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிண்டே எழுதிய கட்டுரையை விஜய் ராம்தாஸ் தமிழாக்கம் செய்திருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இது பகிரப்பட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்:
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேல் ஆகின்றன.அதில் முதல் 58 நாட்கள் சிபிஐ காவலிலும், நீதிமன்ற காவலிலும் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அதற்கு பின் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பிறகு தற்போது அவர் திகார் சிறையில் இருக்கிறார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அவருடைய ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கவுள்ளது. ஜாமீன் கேட்டு அவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் ஐந்து முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
தர்க்க ரீதியான கேள்விகள்
ஆக நூறு நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் இதுவரை என்ன நிரூபிக்க முடிந்தது? இந்த வழக்கில் இதுவரை என்ன முன்னேற்றம் நடந்துள்ளது? ஆவணங்களை ஆதாரமாக நம்பியிருக்கும் வழக்கில் ஒருவரை காவலில் வைத்து விசாரிப்பது சரியானது தானா? இவை எல்லாம் தர்க்கரீதியான கேள்விகள், இந்த கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்கப்பட வேண்டும்.
சாட்சிகளைக் கலைக்கமாட்டார்
இந்த வழக்கு சம்பந்தமாக அக்டோபர் 22 ஆம் தேதி சிபிஐ வழக்கில் .ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம், சிபிஐ எழுப்பிய அத்தனை ஆட்சேபனைகளையும் நிராகரித்தது மட்டுமல்லாமல் ப சிதம்பரம் வழக்கு சம்பந்தமாக எந்த சாட்சியையும் கலைக்க முயற்ச்சிக்கவில்லை என்பதையும் உறுதி செய்தது. இதில் கவனிக்க பட வேண்டிய மற்றொரு செய்தி, டெல்லி உயர்நீதிமன்றம் ப சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த போதிலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லவோ அல்லது சாட்சிகளை கலைக்கவோ வாய்ப்பு இல்லை என்று தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டது. அமலாக்கத்துறை அக்டோபர் 17 ஆம் தேதியே ப சிதம்பரத்தை கைது செய்ததால் அவரால் ஜாமீனில் வர இயலவில்லை.
வினோதமான வாதங்கள்
இதுவரை விசாரிக்கப்படாத கற்பனையான சாட்சிகளிலிருந்தும், ப.சிதம்பரம் அறிவாற்றல் மிக்கவராக இருப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் துஷர் மேக்தாவின் வினோதமான வாதங்கள் தான் இந்த வழக்கின் நிலையை கூறுகிறது. வழக்கில் சொன்ன குற்றச்சாட்டுகளும் நிலையானதல்ல. முதல் தகவல் அறிக்கையில் 3.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டு அதற்கு பிறகு நான்கு முறை வீடுகளில் சோதனையிட்டு, கார்த்தி சிதம்பரத்தை யும், ப சிதம்பரத்தையும் காவலில் எடுத்து விசாரித்த பிறகு 29 மாதங்கள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 9.96 லட்சம் லஞ்சமாக பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ9.96 லட்சம் லஞ்சம்?
லஞ்சமாக பெறப்பட்டதாக கூறப்படும் இந்த 9.96 லட்சம் ரூபாய் காசோலையாக அதுவும் வருமான வரி பிடித்தம் போக ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது! 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் போது திரு. ப சிதம்பரம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனக்கு 95.66 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் திரு. கார்த்தி சிதம்பரம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனக்கு 79.37 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆக 9.96 லட்சம் ரூபாயை லஞ்சமாக அதுவும் 13 பேர் பகிர்ந்து கொண்டார்கள் என்று கூறுவது வேடிக்கையான ஒன்று.
முடிவுக்கு ஒப்புதல் வழங்கினார்
ஒப்புதல் வழங்கிய அன்றைய நிதியமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை கூறிய சிபிஐ அன்று அந்நிய முதலீட்டு மேம்பாடு ஆணையத்தில் இருந்த ஆறு அதிகாரிகளை மட்டும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்து ஏன்? முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ் தலைமையில் அப்போது செயல்பட்ட அந்திய முதலீட்டு மேம்பாடு ஆணையம் பரிசீலனை செய்த பிறகு நிதியமைச்சர் என்ற முறையில் இறுதியாக அதற்கு ஒப்புதல் வழங்கினார் ப சிதம்பரம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
ப.சி.க்கு மட்டும் குறி?
ஆனால் .ப சிதம்பரத்தை மட்டும் குறி வைப்பது ஏன்? நிதியமைச்சர் என்ற முறையில் அந்நிய முதலீட்டு மேம்பாடு ஆணையத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் பரிசீலனை செய்த பிறகு இறுதியாக தனக்கு அனுப்பப்பட்ட கோப்பில் கையெழுத்து இட்டு அதற்கு ஒப்புதல் வழங்கியதை தவிர வேற என்ன தவறை .ப சிதம்பரம் செய்தார்? சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்களை பார்க்கும் போது இந்த அரசில் இருப்பவர்களை திருப்தி படுத்துவதற்காகவே ஜோடிக்கப்பட்ட வழக்கு தான் இது. உதாரணமாக, ப சிதம்பரத்தையோ அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையோ ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் சந்தித்தற்கான ஆதாரத்தை வழங்க முடியவில்லை.
டெல்லி கோர்ட் கருத்து
ரசீதுகள், தொலைபேசி உரையாடல்கள் இவை எதுவும் இல்லாத போது குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். கர்க் தன்னுடைய தீர்ப்பில் " அந்நிய முதலீட்டு மேம்பாடு ஆணையத்தில் இருந்த அதிகாரிகள் யாரையும் கார்த்தி சிதம்பரம் சந்திக்கவில்லை " என்று குறிப்பிட்டார்.
வங்கி கணக்கு முரண்பாடுகள்
மேலும் அமலாக்கத்துறையின் காவலில் இருந்த போது உடல்நலக் குறைவால் இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்களில் கூட பல முரண்பாடுகள் இருந்தன. ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வந்த போது 17 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் அடுத்த விசாரணையின் போது 10 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்பித்தது.
வதந்திகள்
இந்த வதந்திகள் எல்லாம் நீதிமன்றத்தை குழப்பவும் ப சிதம்பரத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே பரப்பட்டது. உண்மையிலயே அவருக்கு கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருந்தால் அந்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்து ப சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் தகுதி நீக்கம் செய்யலாமே?
இந்திராணி முகர்ஜி விடுதலை
இந்த வழக்கில் கவனிக்க பட வேண்டிய மற்றொரு செய்தி, ப சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கர்க் ஓய்வு பெற்ற சில நாட்களில் சட்ட விரோத பணம் பரிமாற்ற தீர்பாயத்தின் தலைவராக இந்த அரசால் நியமிக்க பட்டார். கடைசியாக இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆன பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். இந்திராணி முகர்ஜியை நாம் எளிதில் மறந்து விட முடியாது. தன்னுடைய சொந்த மகளை கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் இருப்பவர் தான் இந்திராணி முகர்ஜி.
அச்சத்தை ஏற்படுத்துகிறது
அவருடைய வாக்கு மூலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தான் இந்தியாவின் பொருளாதாரத்தை தன்னுடைய சீர்திருத்தங்களால் நிலை நிறுத்திய நாட்டின் ஆகச் சிறந்த ஆளுமையான ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவருடைய கைது மட்டும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நாட்டின் பலவீனமான நீதிமன்றங்கள், முதுகெலும்பு இல்லாத விசாரணை அமைப்புகள் மற்றும் எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்க துடிக்கும் ஒரு அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 100 நாட்களை கடந்து இன்னும் நீதிமன்ற காவல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது..