சுட்டெரிக்கும் சூரியன்.. சேலத்தில் அதிகபட்சமாக 102 ஃபாரன்ஹீட்.. சென்னையில் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருத்தணி ஆகிய மூன்று நகரங்களில் இன்று 100 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
பிப்ரவரி மாதம்தான் ஆகிறது. ஆனால், தமிழகம் உட்பட பல தென் மாநிலங்களிலும் இப்போதே, ஏப்ரல் மாத வெயில் போல வெப்பம் வாட்டி வருகிறது.
மக்கள் கடுமையான புழுக்கம் மற்றும் வெக்கையால், அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இப்போதே, ஏசி விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் மூன்று நகரங்களின் 100 ஃபாரன்ஹீட்டுக்கும் மேலே வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 102 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது சுமார் 39 செல்சியஸ் ஆகும்.
தர்மபுரியில் 101 ஃபாரன்ஹீட், திருத்தணியில், 100 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 90 ஃபாரன்ஹீட் (32.2 டிகிரி), வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 91 ஃபாரன்ஹீட் (32.7 செல்சியஸ்) வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
ஆஹா.. இப்பவே இப்படி வெயில் அடிக்குதே, அப்போ கோடை காலத்தில் எப்படி வெயில் அடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.