100% இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி- தமிழக அரசின் அலட்சியத்துக்கு ஹைகோர்ட் 'செம' சாட்டையடி
சென்னை: கொரோனா உருமாறித் தாக்கி வரும் நிலையில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி கொடுத்த அலட்சியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கொடுத்துள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,044. இதுவரை கொரோனாவுக்கு 1,50,606 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 8,23,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12,200 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனா தாக்கம் தமிழகத்தில் குறைந்து இருந்தாலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
ப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்
உருமாறிய கொரோனா
இதனால் இந்த கல்வி ஆண்டு முழுவதுமே பள்ளிகூடங்கள் அனைத்தும் மூடப்பட்டும் இருக்கின்றன. தற்போது புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கமும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. பல நாடுகள் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தி இருக்கின்றன.
தமிழக அரசுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் திடீரென 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்த தமிழக அரசு திடீரென திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் திறக்கலாம் என உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
மத்திய அரசு கண்டனம்
தமிழக அரசின் முடிவால் கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் திரைத்துறையினருக்காக தமிழக அரசு எதனையும் ஆராயாமல் தமது முடிவில் உறுதியாக இருந்தது. தமிழக அரசின் அலட்சியத்துக்கு ஏற்கனவே மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஹைகோர்ட் தடை
தற்போது தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அத்துடன் பள்ளிக்கூடங்களையே திறக்க முடியாத சூழ்நிலை இருக்கும் நிலையில் எப்படி திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் அனுமதிக்கலாம்? எனவும் சுளீர் கேள்வியை கேட்டிருக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். அதேபோல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் வரை தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலையும் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.
50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தடையால் 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க முடியும். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அலட்சியம் காட்டக் கூடாது என்பதை இனியாவது தமிழக அரசு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.