ஒரு பக்கம் விஜய்.. மறுபக்கம் பொள்ளாச்சி கேஸ்.. நடுவில் சிக்கிய எடப்பாடியார்.. பிரஷரை தருகிறதா பாஜக?
அதிமுகவுக்கு பாஜக மறைமுகமான அழுத்தத்தை அதிகப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது
சென்னை: மிகப்பெரிய தர்மசங்கடத்தில் அதிமுக சிக்கி கொண்டுள்ளது... ஒரு பக்கம் பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகர் கைதாகிறார்.. சிபிஐ அவரை கைது செய்கிறது.. அதுவும் 2 வருடங்கள் கழித்து.. இன்னொரு பக்கம், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. இது என்ன மாதிரியான குறியீடு? இதில் இருந்து நாம் என்ன புரிந்து கொள்வது?
எடப்பாடியாரை பொறுத்தவரை அவருக்கு சிக்கல் கட்சிக்குள்ளும் இருக்கிறது, கூட்டணியிலும் இருக்கிறது வெளியிலும் இருக்கிறது..
உட்கட்சி பூசல், பாஜகவின் நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் திமுகவின் அசுர வளர்ச்சி என அனைத்துக்கும் வேகம் தரும் நிலையில் உள்ளார்.. இந்த எடப்பாடி அரசுக்கு சாதகமாக இருப்பது 2500 ரூபாய் பொங்கல் பரிசும், கொரோனா கால செயல்பாடுகளும்தான்!
விஜய்
இவைகளை சொல்லி ஓட்டு கேட்டாலும், அதைவிட சர்ச்சைகள் அதிகம் வந்து இந்த கடைசி நேரத்தில் சேர்ந்துவிட்டன என்பதையும் மறுக்க முடியாது. அதில் ஒன்று விஜய் விவகாரம், மற்றொன்று பொள்ளாச்சி பாலியல் விவகாரம்!!... தியேட்டர்களில் 100 சதவீத சீட்டுகளை விஜய் வாய் விட்டு கேட்டுவிட்டார் என்ற ஒன்றிற்காகவே எடப்பாடியார் அவரது கோரிக்கைக்கு செவி சாய்த்து விட்டார்.
அறிவிப்பு
மற்றபடி இந்த அறிவிப்பானது பொதுமக்களின் எதிர்ப்பை நிறையவே சம்பாதித்து வருகிறது.. இந்த எதிர்ப்பு எடப்பாடியாருக்கும், விஜய்க்கும் சரிசமமாகவே செல்கிறது.. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நற்பெயர்களை இவர்கள் 2 பேருமே குறைத்து கொண்டும் வருகிறார்கள். தன்னுடைய மாநில மக்களின் மீது எடப்பாடியாருக்கும், தன்னுடைய உயிரினும் மேலான ரசிகர்கள் மீது விஜய்க்கும்தான் முழு முதற் அக்கறை இருந்திருக்க வேண்டும்.. ஆனால், விஜய்க்காக எடப்பாடியார் இறங்கி வந்து ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
சர்ச்சை
இப்போது இதுதான் வினையாகி விட்டது.. இதே விஜய்தான் சர்க்கார் படத்தில், இதே முதல்வரை சீண்டி, சீன்களை உள்ளே புகுத்தி ரசிகர்களை உசுப்பேத்தியதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.. ஏதோ ஒரு சொந்த எதிர்பார்ப்பை நம்பி, விஜய்க்கு முதல்வர் ஓகே சொல்லிவிட, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. மத்திய அரசின் இந்த கறார்தன்மையை காட்டுவது வரவேற்புக்குரியதுதான்.. அதனால் பொதுமக்களுக்கும் நன்மைதான்.. அதேசமயம், அதிமுகவுக்கு எதிரான காய்நகர்த்தலாக இது பார்க்கப்படுகிறது.
அதிமுக பிரமுகர்
அதேபோல பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகர் கைதாகிறார்.. அதுவும் 2 வருடங்கள் கழித்து.. இவரை கைது செய்தது சிபிஐ... இதெல்லாம் இது என்ன மாதிரியான குறியீடு? அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைளை பாஜக கையில் எடுத்துள்ளது ஏன்? சொந்த கூட்டணி கட்சி விவகாரத்தை அவர்களுக்குள் உட்கார்ந்து பேசி தீர்த்து கொள்ளாமல், இப்படி தாறுமாறான நடவடிக்கைகளில் இறங்குவது எதிர்க்கட்சியான திமுகவுக்கே பலம் சேர்த்து விடும் என்று பாஜகவுக்கு தெரியாதா?என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன.
கூட்டணி
ஏற்கனவே கூட்டணிக்குள் குழப்பங்கள் இருக்கின்றன என்பதற்காகத்தான், அமித்ஷா சென்னை வரும்போது அவை பேசி தீர்த்து கொள்ளப்படும் என்று நம்பப்பட்டது.. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அவரது வருகையும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.. ஒருவேளை கொரோனாதான் காரணமா? அல்லது அதிமுக - பாஜகவின் சிக்கல்கள் அதிகமாகி கொண்டே போகிறது என்பதுதான் காரணமா என தெரியவில்லை.
திமுக
ஒருவேளை நாளைக்கே சுமூக முடிவு எட்டப்பட்டு, வேண்டிய சீட்டுகளையும் பெற்று கொண்டு, இதே கூட்டணிக்குள் பாஜக மீண்டும் பயணத்தை தொடங்கினாலும், அதிமுகவுக்கு கெட்ட பெயரை இந்த தேர்தல் நேரத்தில் பாஜக தந்துவிட்டது என்பதை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.. நேற்றே கனிமொழியும், ஸ்டானும், உதயநிதியும் பொள்ளாச்சி விவகாரத்தை கையில் எடுத்து விட்டனர்.. அதனால், இந்த தேர்தல் முடியும்வரை திமுகவின் பிரச்சாரத்தில் அதிமுக சிக்கி கொண்டுள்ளதையும் தடுக்க முடியாது..!