தமிழினத்தின் பேராசான் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி
Recommended Video
சென்னை: கருணாநிதி மறைந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி அவரது சமாதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். இந்தி எதிர்ப்பு, காவிரி பிரச்சினை, இடஒதுக்கீடு முறை, மாநில உரிமை என பெரும்பாலான பிரச்சினைகளுக்கு போராடி தீர்வு கண்டவர்.
இறுதியில் அவருக்கு நினைவிடம் அமைப்பதற்காக மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. அண்ணா துயில் கொள்ளும் இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கருணாநிதி உயிருடன் இருந்த போதே பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
அனுமதி
அதன்பேரில் அவரது ஆசையை நிறைவேற்ற தமிழக அரசிடம் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. எனினும் தமிழக அரசோ மெரினாவில் ஏற்கெனவே வைக்கப்பட்ட நினைவிடங்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி அனுமதி மறுத்தது.
நினைவிடம்
இதையடுத்து திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. இறுதியில் இந்த போராட்டத்திலும் கருணாநிதி வென்றார். அவருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது.
மலர் அலங்காரம்
அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அன்றாடம் அவரது சமாதியில் வைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றுடன் அவர் மறைந்து 100 நாட்கள் ஆகிறது. இதனை அடுத்து அவரது சமாதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ரசித்த வண்ணம்
தாயை பெரிதும் மதித்த அவரது சமாதியில் அஞ்சுகத்துடன் கருணாநிதி இருப்பது போன்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதை மெரினாவுக்கு வரும் பயணிகள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.
|
ஸ்டாலின் நெகிழ்ச்சி அஞ்சலி
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்:
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத்தின் பேராசான் தலைவர் கலைஞர் அவர்கள் நிரந்தர ஓய்வெடுத்து இன்றோடு 100 நாட்கள்! 80ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வில் தோல்வி ஏற்படினும் துவண்டு போகாமல், வீண்பழி சுமத்திய வீணர்களை ஜனநாயக அறவழியில் விரட்டிய அதே வழியில் நாமும் பயணிக்க உறுதியேற்போம்!