செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடி - நீர் திறப்பு விநாடிக்கு 1500 கனஅடியாக அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பிற ஏரிகளில் இருந்து உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று இரவு 7 மணி நிலவரப்படி, 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22.10 அடியை எட்டியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெய்த பெருமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்கவே, திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டது. அடையாற்றில் ஏற்கனவே வெள்ளம் சென்ற நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தண்ணீர் திறப்பினால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு ஏரியிலிருந்து 9000 கன அடி நீர் திறப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிவர் புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
காஞ்சிபுரத்தில் தெறித்து ஓடும் பாலாறு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இன்று மழைப்பொழிவு குறைந்ததால் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் இன்று காலையிலிருந்து குறைக்கப்பட்டு வருகிறது. 5,000 அடி, 3,000 அடி எனக் குறைக்கப்பட்டு காலையில் 550 அடியாகக் குறைக்கப்பட்டது. மாலையில் 1000 கன அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதால் மீண்டும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1500 அடியாக உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து ஏரிகளில் இருந்து உபரி நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்வரத்து 2,162 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 24 அடி என்கிற நிலையில் தற்போது 22.05 அடியாக உள்ள நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியில் நிலையாக வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.