கிடுகிடு உயர்வு.. தமிழகத்தில் இன்று புதிதாக 102 பேருக்கு கொரோனா.. மொத்த எண்ணிக்கை 411-ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று கூடுதலாக 102 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 1580 பேர் மருத்துவமனைகளில் கண்காணிப்பின் கீழ் உள்ளனர். தமிழகத்தில் போதிய அளவு முகக் கவசம், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. எங்கெங்கு நோயாளிகள் உள்ளனரோ, அதை சுற்றிலும் கண்டெண்ட்மெண்ட் திட்டத்தை செயல்படுத்தி பிற இடங்களுக்கு பரவாமல் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 90 ஆயிரத்து 412 பேர் இருக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க விரும்புவோர், அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
அரசு இந்த சிகிச்சை வழங்குவதற்காக சில மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் அங்கு சிகிச்சை பெறலாம். தமிழக அரசின் முழு கவனமும் கண்டைன்மெண்ட் திட்டத்தில் தான் இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் வீடுகளை சுற்றி சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு முழுமையாக கண்காணிக்கப்படுகிறது.
ஆக்டிவ் நோயாளிகள்.. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா.. மஹாராஷ்டிராவை முந்தியது!
இன்று புதிதாக உறுதி செய்யப்பட்ட 102 நோயாளிகளில், டெல்லியிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 100 பேருக்கு பாசிட்டிவ் ஆகியுள்ளது. மேலும் இருவரில், ஒருவர் அமெரிக்கா பயணம் செய்திருந்தவர். மற்றொருவர் தொடர்பு பற்றி விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் அனைத்து கொரோனா நோயாளிகளும், ஐசியூ கூட தேவைப்படாத அளவுக்கு நல்ல நிலையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.