"சார், அந்த தெலுங்கானா.. அதுவும் நாம சொல்லி தானா".. நக்கலடித்த செந்தில்குமார்.. சரமாரி கமெண்ட்டுகள்!
பாமகவின் அறிக்கைக்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலடி தந்துள்ளார்
சென்னை: "சார், அந்த தெலுங்கானா... அதுவும் நாம சொல்லி தானா..." என்று அன்புமணி ராமதாஸிற்கு தி.மு.க. எம்பி செந்தில்குமார் பதிலடி ஒன்றினை தந்துள்ளார்.
திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று வலுவான கோரிக்கை விடுத்தது.
முக ஸ்டாலின் இதை பற்றி சொல்லும்போது, "எங்கள் பிள்ளைகளுக்கு நோய்த் தொற்று வராது என்று இந்த அரசாங்கத்தால் உத்தரவாதம் தர முடியுமா? உங்களை நம்பி எப்படி தேர்வுக்கு அனுப்புவது? எதற்காக இந்த அவசரம்? கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பொதுத் தேர்வை நடத்தினால் குடியா முழுகிவிடும்?" என்று கேட்டார்.
திமுகவை போலவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் இதே கோரிக்கையை வைத்திருந்தார். "ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இருக்கும் நிலையில், அரசு பிடிவாதம் காட்டுவது யாருக்கும் நன்மை பயக்காது, பிள்ளைகள் தேர்வு எழுதினாலும் சமூக விலகல் கடைப்பிடிக்க முடியாது.. அவர்களை ஆல் பாஸ் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில்தான் நேற்று தமிழக அரசு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்படுவர் என்றார். இந்த அறிவிப்பு தாங்கள் தந்த அழுத்தத்தினால்தான் வெளியானது என்று திமுக, பாமக இரு தரப்பினருமே சொல்லி கொண்டுள்ளனர்.
எம்பி அன்புமணி ராமதாஸ் இதுசம்பந்தமான ட்வீட்டில், "பாமக கோரிக்கையை ஏற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் அனைத்து மக்களின் அச்சத்தை அரசு போக்கியிருக்கிறது; நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது!" என்றார்.
அன்புமணியின் இந்த ட்வீட்டுக்கு திமுகவின் எம்பி செந்தில்குமார் பதிலடி தந்து, ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. நேற்று பதிவிட்டிருந்த அந்த ட்வீட்டில், "சார், அந்த தெலுங்கானா... அதுவும் நாம சொல்லி தானா..." என்று ஒற்றை வரியில் கமெண்ட் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனாவை ஒழிக்க.. கூடுதலாக 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அரசு அறிவிக்கும் சலுகைகளும், அறிவிப்புகளும் தங்களது கோரிக்கையினால் தான் என்று பாமக சொல்லி வருகிறதை கிண்டல் செய்யும் பொருட்டே இவ்வாறு எம்பி பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ட்வீட்டை அடுத்து வழக்கம்போல் பாமக - திமுகவினரின் கருத்து மோதல் ட்விட்டரில் வலுத்து வருகிறது.