11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. அதிமுக ஆட்சி மீது தொங்கும் கத்தி.. 10 நாட்களில் தீர்ப்பு?
11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தீர்ப்பு 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது.
சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கிய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது அதிமுகவை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும்.
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதை பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
என்ன பின்னணி
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆட்சி அமைப்பதற்காக அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் அப்போது அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனியாக இருந்தனர். இரண்டு அணிகளாக அதிமுக அப்போது இருந்தது.
எதிராக வாக்கு
அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் எல்லோரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை.
இல்லை
ஆனால் சில வாரங்களுக்கு பின் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 18 இடங்களும் இன்னும் காலியாக உள்ளது. கொறடாவின் உத்தரவு சரிதான் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திமுக வழக்கு
இந்த நிலையில், 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார். இதற்கு எதிராக டிடிவி தினகரனும், திமுகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது விசாரணை நடந்து முடிந்துள்ளது.
தீர்ப்பு எப்போது
இந்த வழக்கில்தான் இந்த வாரத்தில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த தீர்ப்பு 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் ஆட்சி கவிழ வாய்ப்பு இருக்கிறது. தமிழக சட்டசபையின் பலம் 235, இதில் தற்போது 21 எம்எல்ஏக்களின் இடம் காலியாக உள்ளது. இந்த தீர்ப்பிற்கு பின் சபையின் மொத்த பலம் 203 ஆக வாய்ப்புள்ளது (தீர்ப்பு ஒ.பி.எஸ்ஸுக்கு எதிராக வந்தால்).
என்ன வாய்ப்பு
இந்த நிலையில் அதிமுகவுடன் 104 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மை பலம் பெற 102 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால் அதிமுகவில் 3 பேர் வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களால் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது என்கிறார்கள். லோக் சபா தேர்தல் வர உள்ள நிலையில் இந்த தீர்ப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.