சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு.. வேறு லெவலில் வாழ்க்கை மாறும்.. முதல்வர் உறுதி
Recommended Video
சேலம்: சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஓமலூரில் நிருபர்களிடம் பேசுகையில், இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டி:
நமது நாட்டில் இப்போதுதான் இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலைகள் வந்துள்ளன. வெளிநாடுகளில் முப்பது வருடங்களுக்கு முன்பாகவே பத்து வழிச்சாலைகள் வந்து தொழில் வளம் பெருகி சிறப்பான வாழ்க்கையை மக்கள் அமைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட வாழ்க்கை, தமிழகத்திற்கு அமையவேண்டும் என்பதைத்தான் தமிழக அரசு விரும்புகிறது. யாரையும் பாதிப்படைய செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் கிடையாது. ஆனால் மக்களின் தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை.
சேலம்-சென்னை 8 வழி புதிய சாலை அமைக்கும் திட்டத்திற்கு 89 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மரத்திற்கு ரூ.40,000 கொடுக்கிறோம். வீட்டுக்கு இழப்பீடு தருகிறோம். வீடு கட்டுவதற்கு நிலம் கொடுத்து அரசே பட்டா வழங்குகிறது. எனவே நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
மேலும், மேகதாது அணை பிரச்சினை குறித்து கர்நாடகாவிடம் பேசுவதற்கு எதுவுமே கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பது மட்டுமே இதற்கு தீர்வு. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.