சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தடுத்தார்.. பொன் மாணிக்கவேல் மீது ஏடிஎஸ்பி புகார்
சென்னை: ஐ. ஜி. பொன்மாணிக்கவேல் மீது அவருடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இன்று, சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நேற்று 13 பேர் புகார் அளித்த நிலையில் இன்று, 11 பேர் புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகார்தாரர்களில் ஒருவரான ஏ.டி.எஸ்.பி. இளங்கோ கூறியதாவது:
விசாரணை அதிகாரியை சுதந்திரமாக விசாரணை நடத்த விடாமல் தன் விருப்பப்படியே விசாரணை நடத்தவும், நடவடிக்கை எடுக்கவும் பொன் மாணிக்கவேல் உத்தரவிடுகிறார். தன் விருப்பப்படி மட்டுமே வழக்கு நடைபெற வேண்டும் என்றும், ஆதாரம் இல்லாத போது கூட கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
நெருக்கடி காராணமாக ஓராண்டுவரை மருத்துவ விடுப்பில் இருந்துள்ளோம். பொன் மாணிக்கவேல் தலைமையில் எந்த சிலையையும் கண்டுபிடிக்கவில்லை. பொன் மாணிக்கவேல் ஐ.ஜி.ஆக இருந்த பொழுது அவர் மீது புகார் கொடுக்க எங்களால் முடியவில்லை.
அவரை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளதால் அவருக்கு கீழ் இனிமேலும் பணி புரிய முடியாது. எனவே எங்களுக்கு வேறு ஏதாவது பணி ஒதுக்கும்படி டிஜிபி யிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
பொன் மாணிக்கவேல் மீது நேற்று 13 பேர் புகார் அளித்திருந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.