தொட்டிலில் இருந்த புடவையை இழுத்து விளையாடிய போது விபரீதம்.. சென்னை ராமாபுரத்தில் சிறுவன் பலி
சென்னை: சென்னை ராமாபுரத்தில் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (38), ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (11), 6 ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை ரகுபதி மனைவியை அழைத்து கொண்டு கடைக்கு சென்று விட்டார்.
வீட்டில் மகன் பாலாஜி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் பார்த்துள்ளார். அப்போது தொட்டிலில் கட்டிய புடவை சிறுவன் பாலாஜியின் கழுத்தை இறுக்கியிருந்தது தெரியவந்தது.
மயங்கிய நிலையில் கிடந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.