தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம்.. காரணம் இதுதான்
சென்னை: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் 11 ஆம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழக பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது! 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!! ரிசல்ட் எங்கே பார்க்கலாம்?
அரியர் முறைப்படி நடத்தப்படும் இந்த பொத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், 12 ஆம் வகுப்பு தேர்வுடன் இதையும் சேர்த்து எழுத வேண்டும்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. மாணவர்கள் http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை பார்வையிட்டு வருகின்றனர்.
தேர்வு முடிவுகள்
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் 90.07% மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். வழக்கம்போலவே இந்த தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.86 சதவீதமாகவும் உள்ளது.
பெரம்பலூர் முதலிடம்
மாநில அளவில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்து இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் 95.44 சதவீத தேர்ச்சியுடன் 2 வது இடத்திலும், 95.25 சதவீத தேர்ச்சியுடன் மதுரை மூன்றாவது இடத்தையும் பிடித்து இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
குறைந்த தேர்ச்சி விகிதம்
இதில், கடந்த 2020 ஆம் ஆண்டில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்து இருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் 96.04 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் 2022 ஆம் ஆண்டில் 90.07% ஆக குறைந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 10,677 பேர் தேர்வுகளை எழுதாத நிலையில், இந்த ஆண்டு தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை 41,376 ஆக அதிகரித்திருப்பதே தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.