ஒன்றுகூடிய 12 கட்சிகள்... பிரம்மாண்டத்தை காட்டத் திட்டம்... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி
சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வரும் திங்கள்கிழமையன்று சென்னையில் திமுக தலைமையில் 12 கட்சிகள் பேரணி நடத்த உள்ளது தமிழக அரசின் நிம்மதியை கலைத்துள்ளது.
ஏற்கனவே மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் என போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும் போராட்டம், பேரணி, என களத்தில் குதிப்பது ஆளுங்கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதனால் சென்னை முழுவதும் குறிப்பாக காமராஜர் சாலை, மெரினா, பசுமைவழிச்சாலை, அண்ணா சாலை, பாரிமுனை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு.. பொது பிரிவில் பெண்களுக்கு 51 நகராட்சிகள்
தவிப்பு
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரியும் நிலையில், அந்தப் போராட்டக் கனலின் சிறுபொறி தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை பல்கலைக்கழகம், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, நியூ கல்லூரி என பல இடங்களில் மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள்
இந்நிலையில், திமுக தலைமையில் மதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மனிதநேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன. அதற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மய்யமும் திமுக பேரணியில் பங்கேற்கும் என ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லியின் கவனத்திற்கு
வரும் திங்கள்கிழமை நடத்தவுள்ள பிரம்மாண்ட பேரணி மூலம் டெல்லியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் திட்டம். இதனால், அனைத்துக்கட்சி தொண்டர்களையும் பெரியளவில் திரட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து திமுக போராட்டம் நடத்திவிட்டதால், அதோடு இந்த விவகாரத்தை ஸ்டாலின் விட்டுவிடுவார் என நினைத்த ஆளும் தரப்புக்கு, 11 கட்சிகளை ஒன்றுகூட்டி ஸ்டாலின் பேரணி நடத்தவிருப்பது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.