'கொரோனா ரெட் ஜோன்' சென்னையில் இருந்து இன்று 1200 பேர் மணிப்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணம்
சென்னை: கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இருந்து 1200 பேர் தங்களது சொந்த மாநிலமான மணிப்பூருக்கு சிறப்பு ரயில் மூலம் புறப்படுகின்றனர்.
கொரோனா லாக்டவுன் மே 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சிறப்பு ரயிலில் பயணம் செய்ய இயலாதவர்கள் இன்னமும் நெடுஞ்சாலைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் நடைபயணமாக நடக்கின்றனர்.
எம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம்
அவுரங்காபாத் 17 பேர் பலி
இப்படி நடைபயணமாக சென்றவர்கள் அசதியில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய போதுதான் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் ஏறியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசத்தையே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
பிற மாநில மணிப்பூரிகள்
இதனிடையே தமிழகம், கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து தங்களது மாநில தொழிலாளர்களை திருப்பி அழைத்துக் கொள்வதில் மணிப்பூர் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து 2,500 பேரும் டெல்லியில் இருந்து 9,000 பேரும் கர்நாடகாவில் இருந்து 4,000 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து 3400 பேரும் மணிப்பூர் செல்ல பதிவு செய்திருக்கின்றனர்.
சென்னை சிறப்பு ரயில்
சென்னையில் இருந்து இன்று காலை 1200 பேருடன் மணிப்பூர் நோக்கி சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை மணிப்பூரின் ஜிரிபாம் என்ற ரயில் நிலையத்தை சென்றடையும். இது தலைநகர் இம்பாலில் இருந்து 261 கி.மீ தொலைவில் உள்ளது.
150 பேருந்துகள்
இந்த ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை அழைத்துச் செல்ல 150 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் உரிய கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மணிப்பூர் மாநில அரசு செய்துள்ளது.