பல மணி நேர வேலை..முடிக்காவிட்டால் தண்டனை.. மியான்மரில் இருந்து மீண்ட தமிழர்கள் கண்ணீர்
சென்னை: மியான்மரில் சட்ட விரோத கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவில் சென்னை திரும்பினர். பல மணி நேரம் வேலை பார்க்க வைத்து தண்டனை கொடுத்ததாக நாடு திரும்பியவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.
Recommended Video
தாய்லாந்தில் ஐ.டி. வேலை எனக்கூறி அழைத்து செல்லப்பட்ட 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள், மியான்மர் நாட்டில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு சட்ட விரோத வேலைகளை செய்யக்கூறி துன்புறுத்தப்பட்ட அவர்களை மீட்க, நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவர்களிடம், குடிவரவுத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து சென்ற அதிகாரிகள் விளக்கம் அளித்து அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்
கடத்தி வைத்து துன்புறுத்தல்.. கொடுமை.. மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை
மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள்
தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தனர். மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில், மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மியான்மரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது.
மீட்கப்பட்ட தமிழர்கள்
மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேர், தாய்லாந்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர். இதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியானது. அதனையடுத்து எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர்.
சென்னை திரும்பிய தமிழர்கள்
அதன்பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2.20 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். தங்களை பல மணிநேரம் வேலை பார்க்க வைத்து தண்டனை கொடுத்து கொடுமை படுத்தியதாக நாடு திரும்பியவர்கள் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர்.
மறையாத பதற்றம்
சென்னை திரும்பிய ஒருவர் இன்னும் பதற்றத்துடனே இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் துபாயில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தோம். துபாய் ஏஜென்ட் தாய்லாந்தில் வேலை இருக்கிறது என்றார். நாங்கள் அங்கு சென்றபோது வேலை இல்லை என்று கூறினார். 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து, ஒரு சீன மக்கள் குழு எங்களை சட்டவிரோதமாக ஒரு ஆற்றைக் கடக்கச் செய்தது இதில் கோவையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறினார். சட்ட விரோதமாக வேலை செய்ததாகவும் அவர் கண்ணீருடன் கூறினார்.
மீட்க நடவடிக்கை
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், மியான்மரில் இன்னும் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகவும் எஞ்சியிருப்பவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.