14 நாள் தனிமை.. நாடு முழுக்க ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்த புது விதிகள்.. தமிழகத்தில் என்ன நிலை?
சென்னை: கொரோனா பாதிப்பிற்கு இடையே நாடு முழுக்க இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் என்ன மாதிரியான விதிமுறைகள் கடைபிடிக்கப்படும், தமிழகத்திற்கு வரும் ரயில்களில் என்ன மாதிரியான விதிகள் கடைபிடிக்கப்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா முழுக்க மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 17ம் தேதி இந்த ஊரடங்கு முடிவிற்கு வருகிறது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும், 18ம் தேதிக்கு முன்னர் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாடு முழுக்க தற்போது ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் பிற மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மிக குறைவான எண்ணிக்கையில் ரயில்கள் அனுமதிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கி உள்ளது.
அடுத்த 10 நாட்கள் முக்கியம்.. வுஹனிலிருந்து தொடங்குவோம்.. 1.1 கோடி பேருக்கு சோதனை.. சீனா செம பிளான்
கடுமையான கட்டுப்பாடு
இதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் நாடு முழுக்க விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயிலில் பயணிகள் ஏறுவதற்கு முன் கண்டிப்பாக எல்லோருக்கும் வெப்பநிலை சோதனை செய்யப்படும். டெம்பரேச்சர் கன் மூலம் இந்த சோதனை செய்யப்படும். எல்லா பயணிகளும் வரிசையாக சோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
எப்படி அனுமதி
அதேபோல் ரயிலில் அவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்ற பின் அங்கு மீண்டும் வெப்பநிலை சோதனை இதேபோல் செய்யப்படும். இதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனே கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இப்படி ரயிலில் பயணம் செய்பவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே தற்போது இந்தியா முழுக்க சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மற்றவருக்கு சோதனை செய்யப்படாது.
எல்லோரும் தனிமைப்படுத்துவார்கள்
இப்படி ரயிலில் வரும் எல்லோரும் உடனே தனிமைப்படுத்தப்படுவார்கள். மொத்தம் 14 நாட்கள் இவர்கள் தனியாக இருக்க வேண்டும். இதற்காக பல்வேறு மாநில அரசுகள் முகாம்களை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கர்நாடக போன்ற மாநிலங்களில் காசு கொடுத்து ஹோட்டல்களில் தங்கலாம். பீகார் போன்ற மாநிலங்களில் இப்படி பயணம் செய்து வந்தவர்களை 14 நாட்களில் வீட்டிலேயே தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழகம் வரும் ரயில்கள்
இந்த நிலையில் தற்போது வரை வெளியாகி உள்ள விவரங்களின் படி சென்னையில் நான்கு ரயில் சேவைகள் இயக்கப்படும்.
வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லிக்கு இரண்டு ரயில்கள் இயக்க்கப்படும்
காலை 6.35 சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படும். டெல்லிக்கு மறுநாள் காலை 10.30 மணிக்கு ரயில் செல்லும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் டெல்லியில் இருந்து சென்னைக்கு புதன் (நேற்று) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரயில்கள் இயக்கப்படும். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் இதற்காக பயன்படுத்தப்படும்.
மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து ரயில் புறப்படும். மறுநாள் இரவு 8.40 மணிக்கு ரயில் சென்னையை வந்தடையும்.
இடையில் எங்கும் நிற்காது
இந்த ரயில்கள் இடையில் எங்கும் நிற்காது. இடையில் எங்காவது ரயில்கள் நின்றால் அங்கு கடுமையான சோதனைகளை செய்ய வேண்டி வரும். மக்கள் அதிகமாக ஏற வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இடையில் இந்த ரயில்கள் எங்கும் நிற்காது. மாறாக டெல்லியில் இருந்து நேராக சென்னைக்கு இந்த ரயில்கள் வந்துவிடும். இடையில் கிராஸிங் போன்ற ரயில்வே தொழில்நுட்ப பணிக்காக சில இடங்களில் நிற்கும்.
தமிழகம் எப்படி சோதனை
தமிழகத்திலும் இதேபோல் ரயிலில் வந்தவர்களில் கொரோனா அறிகுறி உள்ள நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும். ரயிலில் வந்த எல்லோரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்கள் எல்லோரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். உடல் வெப்பநிலை அதிகம் உள்ள சிலர் மட்டும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
நான்கு ரயில்கள்
தற்போது வரை வெளியாகி உள்ள விவரங்களின்படி தமிழகத்திற்கு மேலே குறிப்பிட்ட நான்கு ரயில்கள் மட்டுமே வரும். அடுத்த வாரம் தமிழகத்திற்கு ரயில் இயக்கப்படுமா என்று உறுதி செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்திற்கு இந்த மாத இறுதி வரை கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் இன்னும் ரயில்வே நிர்வாகம் முழுமையாக முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
பொதுவான விதிகள்
அதே சமயம் பின் வரும் விதிகளும் ரயில் நிலையங்களில் நாடு முழுக்க அமலுக்கு வந்துள்ளது.இ டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிகள் உள்ளே வர முடியும். இ டிக்கெட் இல்லாத யாரும் ரயில் நிலையத்திற்குள் வர முடியாது.புக்கிங் செய்யாமல் ரயில் நிலையம் வர முடியாது. வெயிட்டிங் லிஸ்ட் இல்லை.ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் எல்லோருக்கும் கை கழுவ கிருமி நாசினிகள் கொடுக்கப்படும்.எல்லோரும் கண்டிப்பாக பயணம் முழுக்க மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.