தாய்லாந்து நாட்டினரிடமிருந்து தமிழகத்தில் 14 பேருக்கு கொரோனா.. பரவியது எப்படி?
சென்னை: தாய்லாந்து நாட்டினரிடமிருந்து தமிழகத்தில் உள்ள 14 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். 4 பேர் குணமடைந்துவிட்டனர். மீதமுள்ள 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 14 பேர் வெளிநாடுகளுக்கே செல்லாமல் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்ததில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
கொரோனா குறைந்தது.. இறைச்சி சந்தையில் வவ்வால், பாம்பு, தேள், பூனை விற்பனை அமோகம்.. திருந்தாத சீனா!
சிகிச்சை
தாய்லாந்து நாட்டின் புகேட் நகரிலிருந்து டெல்லி வழியாக மார்ச் 11-ஆம் தேதி ஒரு குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர். இந்த குழுவில் 69 வயது ஆண் மற்றும் 75 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி
அவர்கள் ஈரோடு வருவதற்கு முன்னர் டெல்லியில் மாநாடு நடத்தியுள்ளனர். மேலும் ரயில் பயணத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களது குழுவில் இந்தியர்களும் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களுடன் பயணம் செய்த 63 வயது ஆணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதே மாதம் 25ஆம் தேதி தெரியவந்தது. அவரும் ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்
இந்த நிலையில் இந்த 63 வயது ஆணுடன் தொடர்பில் இருந்த 33 பேரை காண்டாக்ட் டிரேசிங் முறையின் மூலம் தமிழக சுகாதாரத் துறை கண்டறிந்தது. இதில் ஒருவர் தற்போது கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 29 வயது மருத்துவராவார். அவர் ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு 29 ஆம் தேதி கொரோனா வைரஸ் உறுதியானது.
கொரோனா தொற்று உறுதி
இந்த மருத்துவரிடமிருந்து அவருடைய 10 மாத குழந்தை, இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 58 வயது, 51 வயது பெண் ஆகியோருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்துடன் தாய்லாந்து நாட்டினருடன் டெல்லியில் ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட 45 வயது ஆண், 48 வயது ஆண், 67 வயது ஆண், 62 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
சிகிச்சை பலனின்றி பலி
மேலும் 42 வயது, 46 வயது ஆண்கள் இருவர் தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்தனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்கள் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பிலிருந்த மதுரையைச் சேர்ந்த 54 வயது ஆணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
14 பேருக்கு கொரோனா
இவர்தான் தமிழகத்தில் கொரோனாவால் இறந்த முதல் நபராவார். இவருடன் தொடர்பிலிருந்து 135 பேரை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து அந்த மதுரை நபரின் குடும்ப உறுப்பினர்கள் 22 வயது ஆண், 44 வயது பெண் ஆகியோருக்கு 27 ஆம் தேதி கொரோனா உறுதியானது. இப்படித்தான் இந்த 14 பேருக்கும் கொரோனா பரவியது.