அமலாகிறது 144.. குடிகாரர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்.. மெல்ல அப்டியே விட்ருங்களேன்.. புண்ணியமா போகும்
மதுக்கடைகள் மூடப்படுவதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டநெரிசல் ஏற்பட்டு வருகிறது
சென்னை: 144 தடை அமலாகும்போது நிச்சயம் மதுக் கடைகளும் மூடப்படும் என்பதால், குடிமகன்கள்தான் திண்டாடப் போகிறார்கள். சரக்கு கிடைக்காமல் ஒரு வாரத்துக்கு இவர்கள் எப்படியும் திண்டாடவே போகிறார்கள். இதனால் முடிந்தவரை வாங்கிப் பதுக்க முயற்சிப்பார்கள் என்பது உறுதி.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கூட்டம் கூட்டமாக யாரும் கூடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனால் தியேட்டர்கள், மால்கள், ஸ்கூல்கள் என கூட்டம் கூடும் இடங்கள் மூடப்பட்டன. அந்த வகையில் பார்களை மூடினார்களே தவிர, டாஸ்மாக்கை மூடவில்லை.
இங்கும்தானே மக்கள் கூடுகிறார்கள், ஏன் மதுக்கடைகளை மட்டும் மூடவில்லை, வருமானம் போய்விடும் என்பதாலா என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டிலும் கேஸ் போட்டனர்.. இதையடுத்து வைரஸ் பரவாமல் இருக்க எல்லா டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாஸ்க், சானிடைசர் வழங்க உத்தரவிடப்பட்டது.
பிறகு சமூக இடைவெளி தேவை என்று ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சரக்கு வாங்கும் நிலை வந்தது.. ஈரோட்டில் ஒரு டாஸ்மாக் கடையில் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடு போட்டு குடிமகன்கள் வரிசையில் நின்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாயின. இந்த சமயத்தில்தான் தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளை மார்ச் 31-ஆம் தேதி வரை அடைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் நேற்றுமுன்தினம் ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடத்தப்பட்டதற்கே குடிமகன்கள் விழிபிதுங்கி விட்டனர்.. கடைப்பிடித்து வந்த அத்தனை விதிகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டனர்.. அதனால் சுய ஊரடங்கு என்ற உத்தரவுக்கு முன்தினமே டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் படையெடுத்துவிட்டனர்.. அன்று ஒரே நாளில் மட்டும் ரூ.220 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இப்போது இன்று முதல் 31-ம் தேதி வரை 144 உத்தரவு போடப்பட்டுள்ளது.. இதனால் அரசுக்கு பெருத்த நஷ்டம் என்றாலும் மனித உயிர்களை காக்க இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.. இவ்வளவு நாள் டாஸ்மாக்கை மூடாத நிலையில், தற்போது டாஸ்மாக்கையும் சேர்த்து மூடவுள்ளது வரவேற்கத்தக்கது.. பாராட்டத்தக்கது! எனினும், குடிமகன்களை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.. டாஸ்மாக் கடைகளில் முட்டி மோதினாலும் அங்கும் 2 நாளுக்கு தேவையான ஸ்டாக் மட்டுமே இருக்கக்கூடும்.
இந்த 144 என்பது அதிரடி உத்தரவு என்பதால் முன்னதாகவே மதுபானங்களை கடைகளுக்கு அனுப்பியிருக்க முடியாது.. 2 நாள் ஸ்டாக்கை எத்தனை பேருக்கென்று தர முடியும்? இதை வாங்க எந்தெந்த கடைகளில் தள்ளுமுள்ளு நடக்கிறதோ தெரியவில்லை.. இதைவிட முக்கியம் இவர்கள் எல்லாம் 31-ம் தேதி வரை எப்படி மது அருந்தாமல் இருப்பார்கள்? ஒருவேளை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுவிட்டால்? இவர்கள் நிலை தெரியவில்லை.
ஆனால் குடிகாரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதாவது குடிப்பழக்கத்தை கைவிட.. எது எதற்கோ குடிக்கிறீர்கள்? சமுதாயத்துக்கு, இந்த நாட்டுக்கு, உங்க நலனுக்கு, உங்க குடும்பத்துக்காக இந்த முறை குடிக்காமல் இருந்து பாருங்கள், பழகுங்கள்.. பிறகு பாருங்க எத்தனை மரியாதையாக நீங்க சமூகத்தில் பார்க்கப்படுவீர்கள்னு. அதற்கு இந்த 144 தடையை ஒரு வாய்ப்பா எடுத்துக்கலாமே!!