இன்னும் 2 நாளைக்கு 15 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்... வானிலையின் ஜில் அறிவிப்பு
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் அதிக அளவில் பெய்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. விவசாயப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார் 4 செமீ, தேவலா, திருவாலங்காடு பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் புதுச்சேரியிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குகிறது.. வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் புதிய பாலம்...பீகாரில் திறந்து வைத்த மோடி
வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளிலும், இன்று அந்தமானிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.