அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை.. 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் தற்போது இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. இது இன்று நள்ளிரவு மன்னார் வளைகுடாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் வளைகுடாவில் புரேவி நிலைக் கொள்ளவுள்ளதால் நாளை தென் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புரேவி புயல் இலங்கை கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஹா.. சென்னை அருகே கொப்பளிக்கும் மேகக் கூட்டங்கள்.. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை.. வெதர்மேன்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில்,
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரம் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாம்பன் கடற்பகுதி அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்கிறது. வேளச்சேரி, பட்டினப்பாக்கம், தரமணி, மந்தைவெளி, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.