வெங்கடாச்சலம் வீட்டில் சிக்கிய 15 கிலோ சந்தன மரப்பொருட்கள் பறிமுதல்.. வனத்துறையில் ஒப்படைப்பு
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான வெங்கடாசலத்தின் வீட்டில் சிக்கிய சந்தன மரப்பொருட்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருப்பவர் வெங்கடாசலம். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள அவரது அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு உள்பட சென்னையில் 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர்.
'ஆபரேஷன் டிஸ்ஆர்ம்'.. ஸ்கெட்ச் போட்ட டி.ஜி.பி.. தட்டி தூக்கிய போலீஸ்.. 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது!
6.5 கிலோ தங்கம்
இந்த சோதனையின் முடிவில் ரூ 2.5 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம், ரூ 13.50 லட்சம் ரொக்கம், 15 கிலோ சந்தனப் பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது போல் 6 கிலோ வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்
வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடாசலம் கடந்த 2019 ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள், திட்டங்களுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆத்தூர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம், அதிமுக ஆட்சியின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரிய தொகையை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு அவசரமாக 52 நிறுவனங்களுக்கு இவர் ஒப்புதல் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பறிமுதல்
இந்த நிலையில் வனத்துறை அதிகாரியாக வெங்கடாசலம் வீட்டிலிருந்து 15 கிலோ சந்தன மரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் சட்டவிரோதமாக இந்த சந்தன மரங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த சந்தன மரத்தை பயன்படுத்தி இரு சிலைகள் உள்பட சிறிய அளவிலான பொருட்களையும் அவர் தயார் செய்து வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் சந்தன மரக்கட்டைகளும் , சந்தன மரத்தால் செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வெங்கடாசலம் மீது வனத் துறை சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.