சபாஷ்.. மொத்தமாக மாறப்போகும் சென்னை! 150 பூங்கா.. 50 விளையாட்டு திடல்..மாநகராட்சியின் பலே திட்டம்!
சென்னை: சென்னையில் பசுமையை அதிகரிக்கவும், பொதுமக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 எனும் திட்டத்தில் புதிதாக 150 பூங்காக்கள், 50 விளையாட்டு திடல்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சென்னை நகருக்கு புதிய தோற்றம் கிடைக்க உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் வசதிக்காக பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காக்களை சுற்றி நிழல் தரும் மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமான மக்கள் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
சிங்கார சென்னை 2.0 திட்டம்
தற்போதைய சூழலில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் உள்ளன. இவை முறைப்படி தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சென்னை மக்களின் நலனை கருத்தில் கொண்டு சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி முக்கிய முடிவு ஒன்றை செய்துள்ளது.
திட்ட அறிக்கைக்கு ஒப்புதல்
அதன்படி சென்னையில் பசுமையை மேம்படுத்தி, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை பொதுமக்கள் வாழ வேண்டும் என்பதற்காக மாநகராட்சியின் 10 மண்டலங்களில் காலியாக உள்ள நிலத்தில் புதிய பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகரில் புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (TUFIDCO) சார்பில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
150 பூங்கா-50 விளையாட்டு திடல்
அதன்படி ரூ.50 கோடி மதிப்பீட்டில் 150 பூங்காக்கள், 50 விளையாட்டு திடல்கள் அமைக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 1 முதல் 4 வரையிலான மண்டலம், 7 முதல் 10 வரையிலான மண்டலம், 13, 14 மண்டலங்களில் மொத்தம் 45 புதிய பூங்காக்கள், 13 விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகளை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தேர்வு
மொத்தம் 58 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் 53 பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பணிகளுக்கு மீண்டும் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளது. விரைவில் ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் மூலம் சென்னையில் தோற்றம் என்பது முழுவதுமாக மாற உள்ளது. அதோடு பொதுமக்களுக்கும் அதிக பலன் கிடைக்க உள்ளது.