அறை எண்: 349.. பாத்திமா ஏன் தூக்கில் தொங்கினார்.. ஐஐடி மாணவி தற்கொலையில் 2-ம் நாள் விசாரணை தீவிரம்
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: "ரிங் போகுது.. ஆனால் எடுக்கவே இல்லை.. அப்பவே எனக்கு பயமாயிடுச்சு.. எங்களை இப்படி தவிக்க விட்டுட்டு போயிடுவான்னு நினைச்சுகூட பார்க்கலையே" என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் அம்மா கதறி துடிக்கிறார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் பாத்திமா லத்தீப். சென்னை ஐஐடியில் எம்ஏ முதல் வருஷம் படிக்கிறார்.
ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு லேடீஸ் ஹாஸ்டலில் அறை எண் 349-ல் தங்கி படித்து வந்திருக்கிறார். நேற்று பாத்திமா மாணவி தன்னுடைய ஹாஸ்டல் ரூமிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியை தேடி அறைக்கு வந்த பக்கத்து ரூம் தோழிகள், பாத்திமா தூக்கில் தொங்கியதை கண்டு ஹாஸ்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க, இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது.
கோட்டூர்புரம்
விரைந்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தொடங்கினர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றாலும், இது கொலையா, அல்லது தற்கொலையா என்பதை கிடைக்கப் போகும் ஆதாரங்கள், மற்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வைத்துதான், தெரியவரும்.
மனகஷ்டம்
பாத்திமா எப்பவுமே இரவு நேரத்தில் அம்மாவுக்கு போன் செய்து பேசிவிட்டு பிறகுதான் தூங்க போவாராம். ஆனால் நேற்று முன்தினம் கூப்பிட்டு பேசவில்லை. அதனால் அம்மாவே மகளுக்கு போன செய்துள்ளார். ரிங் போயும் பாத்திமா எடுக்கவில்லை. அதனால் குழப்பத்துடனே மன கஷ்டத்துடன் அம்மா தூங்க போய்விட்டார். விடிந்ததும் திரும்பவும் போன் செய்துள்ளார். ஆனால், ரொம்ப நேரமாக ரிங் போய்கொண்டே இருந்ததே தவிர, பாத்திமா எடுக்கவில்லை என தெரிகிறது.
தற்கொலை
அதனால், பயந்துபோன அவரது அம்மா, பாத்திமாவின் பக்கத்து ரூமில் தங்கியிருக்கும் இன்னொரு மாணவியை செல்போனில் கூப்பிட்டு, மகளுக்கு என்ன ஆச்சு என்று பார்க்க சொல்லி இருக்கிறார். அதன்பிறகு அவர்கள் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. தட்டியும் திறக்கவில்லை.. பிறகு கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தபோதுதான் தூக்கில் பாத்திமா தொங்கியது தெரியவந்துள்ளது.
காரணம்?
போன வாரம் நடந்த தேர்வில் மதிப்பெண் (இன்டெர்னல் மார்க்) குறைவாக பாத்திமா வாங்கியதாக தெரிகிறது. அதனால் இவர் சில நாட்களாகவே பெரும் கவலையுடன் காணப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்த தோல்வி காரணமாக பாத்திமா தூக்கில் தொங்கிவிட்டாரா என உறுதியாக தெரியவில்லை.
பீதி
ஆனால், ஐஐடி மாணவர்கள் இப்படி தூக்கில் தொங்குவது இது முதல்முறை அல்ல.. இந்த ஆண்டு மட்டும் 4-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்டலிலேயே தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது. உயர்படிப்பு படிக்கும் மாணவர்கள் இப்படி ஏன் தற்கொலையில் முடிவை தேடி கொள்கிறார்கள் என்ற கேள்வியும் பீதியும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.