பெண்களுக்கு சொத்துரிமை: 1929-ல் பெரியார் எழுப்பிய உரிமை முழக்கத்தை 1989-ல் சட்டமாக்கிய கருணாநிதி
சென்னை: பெற்றோரின் சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று தேசம் முழுவதும் சிலாகிக்கப்படுகிறது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு சொத்து உரிமை வழங்க வேண்டும் என்கிற கலகக் குரலை இந்த மண்ணில் தந்தை பெரியார் எழுப்பினார். அதையே 1989-ல் தமிழக முதல்வராக கருணாநிதி சட்டமாக்கி பெரியாருக்கு காணிக்கையாக்கினார்.
தந்தை பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறிய சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இதன் சார்பாக 1929-ம் ஆண்டு பிப்ரவரி 17,18 ஆகிய நாடுகளில் செங்கல்பட்டில் (அன்று செங்கற்பட்டு) முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்களில் மிக முக்கியமானவை பெண்கள் தொடர்பானவை.
பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாகச்சொத்துரிமைகளும், வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்; பள்ளிக்கூடஉபாத்தியாயர்கள் (ஆசிரியர்கள்) வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் (ஆசிரியர்) வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டும் என்பது மாநாட்டு தீர்மானங்களில் ஒன்று. இந்த மாநாட்டு நாளில் 36 மைல் நீள ஊர்வலம் சென்னையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டை அடைந்தது. மாநாட்டுத் தலைவர்கள் மோட்டார் கார்களில் அணி வகுக்க, வழி நெடுக மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். மலர் பொழிதல், ஒலி முழக்கங்களுடன் காலை 8.30 மணிக்கு சென்னை தியாகராயர்மண்டபத்திலிருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது என வரலாற்று பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த மாநாடு நடைபெற்ற 60 ஆண்டுகளுக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி, பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு என்கிற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றினார். ஆம் தந்தை பெரியாரின் கனவை அவரது தலைமாணாக்கர்களில் ஒருவரான கருணாநிதி அரியாசனத்தில் இருந்தபோது சட்டமாக்கி நிறைவேற்றினார்.
பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்
தமிழகத்தின் இந்த சட்டத்துக்குப் பின்னர்தான் 16 ஆண்டுகள் கழித்து 2005-ல் இந்திய அளவில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் தொடர்பான வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று பூர்வீக சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை என்கிற தீர்ப்பு வழங்கி வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது.