இரவு 2 மணி.. குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே வந்த சென்னை மக்கள்.. உடனே மின்சார வாரியம் குட் நியூஸ்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் ஏற்படும் தொடர் மின்தடையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த மின்வெட்டு விவகாரம் குறித்து மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விரிவான விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அத்துடன் தமிழக அரசு மேற்கொள்ள போகும் அதிரடி நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.. சென்னையின் மின்சாரத் தேவையும், களத்தில் நிலவும் தற்போதைய சூழலும், அதற்கு அமைச்சர் தந்த திடமான பதிலையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சென்னையில் மின்தடை
நள்ளிரவு 2 மணி அளவில் கரண்ட் போனதும், ஃபேன்கள், ஏசி இயந்திரங்கள் நின்றுவிடுகின்றன.. இதனால் புழுக்கம் தாங்கால் குழந்தைகள் கண் விழிக்க நேரிடுகின்றன.. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு சாலையில் இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பல குடியிருப்புவாசிகள், "இன்வெர்ட்டர் இருந்தும் நீண்ட நேர மின்தடையால் சார்ஜ் தீர்ந்து போய், இரவு முழுக்க இருட்டிலேயே தவிக்கிறோம். கொசுக்கடி தாங்க முடியல, சின்ன குழந்தைகளை வெச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல" என்று கொதிப்புடன் சொல்கிறார்கள்.. புதிய ஆட்சியில் இப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்க்காத மக்கள், இந்த மர்மமான மின்தடையால் கடும் ஆத்திரத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர்.
மின்வெட்டுக்கு காரணம்
இந்த மின்வெட்டு விவகாரம் பொதுமக்களிடையே பெரும் பேச்சாக கிளம்பி உள்ள நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின்சாரத் துறை கடந்த 20 ஆண்டுகளாக 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன், துறையைச் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகத் தெரிவித்தார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் அழுத்தம் மற்றும் பழைய கேபிள்கள் பழுதாவதுதான் இரவு நேர மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் உறுதி
மின்சார துறையைத் தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணம் துளியும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த நிர்மல் குமார் "இது மக்கள் சொத்து" என்று அழுத்தம் திருத்தமாகச கூறியிருககிறார்..
அதுமட்டுமல்ல, மின்வெட்டு விவகாரத்தில், அதிகாரிகளின் குளறுபடி ஏதாவது இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அமைச்சர், சென்னையில் மட்டும் 7 சிறப்புப் பொறியாளர் குழுக்களை அமைத்து, மின் கம்பிகள் பழுதாகும் இடங்களை உடனே சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மின்சார வாரியம் குட் நியூஸ்
மின் துறையில் பெரிய அளவிலான சீரமைப்புப் பணிகளைச் செய்துவிட்டதாகவும், எஞ்சிய பணிகளையும் விரைந்து முடித்து அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தடையற்ற மின்சாரம் கிடைக்க வழி செய்வோம் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கால் சென்டரை நேரடியாகத் தொடர்பு கொள்ள 94987 94987 என்ற எண்ணையும், 24 மணி நேர இலவச உதவி எண்ணான 1912-ஐயும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். துணை மின் நிலையங்களில் பணிபுரியும் நபர்கள் வேறு வேலையில் மும்முரமாக இருந்தால், உடனே இந்த எண்களை அழையுங்கள், உங்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் இப்படி பலவிதமான உறுதியையும், நம்பிக்கை வார்த்தைகளையும் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு ஆறுதலை தந்து வருகிறது.. எனினும் நள்ளிரவில் மின்சாரம் இல்லாமல் தவிப்பது எப்போது தீரும், இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நீடிக்கவே செய்கிறது...!!












Click it and Unblock the Notifications