கந்து வட்டியைவிட மோசமான லோன் ஆப்கள்.. இரு சீனர்கள் உள்பட 4 பேர் கைது
சென்னை: ஆன்லைன் கந்துவட்டி கடன மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
2020-ஆம் ஆண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பாதிப்பை கொடுத்துவிட்டது. கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய கடைகள் வரை மூடப்பட்டன.
தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என மூடப்பட்டன. இதனால் தனியார் நிறுவனங்களில் சிலரை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். வேலை இழந்தவர்கள் பணத்தேவைக்காகவும் குடும்பத்தை நடத்தவும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வயசு பெண்களிடம் அத்துமீறிய போலீஸார்.. தண்டனைக்குள்ளாகாமல் தப்பும் விபரீதம்.. தீர்வுதான் என்ன?
சாதகம்
இந்த சூழலை சமூகவிரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆன்லைன் ஆப்கள் மூலம் கடன் வழங்கப்படும் என விளம்பரங்களை இணையதளத்தில் வெளியிட்டனர். இதை நம்பிய மக்கள் பணத்தேவைக்காக எதையும் யோசிக்காமல் பார்த்த செயலிகளை எல்லாம் தங்கள் போனில் டவுன்லோடு செய்தனர்.
கந்து வட்டி
இதன் மூலம் கடன் பெற்று வந்தனர். ஆனால் கந்து வட்டியை விட மோசமாக இருந்தது இந்த ஆன்லைன் கடன். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞர் தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக ரூ 4 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர் கடனை செலுத்த முடியவில்லை.
கடனை கட்ட முடியாத பிராடு
இதனால் அந்த நிறுவனத்தினர் விவேக்கை ஆபாசமாக திட்டி அவரை அவமானப்படுத்தி பேசி அந்த தொலைபேசி உரையாடலை இணையத்திலும் உலவ விட்டனர். இதனால் மேலும் அவமானம் அடைந்த விவேக் தற்கொலை செய்து கொண்டார். கடன் செலுத்தாவர்களின் போனில் உள்ள தொலைபேசி எண்களை எடுத்து இவரது புகைப்படத்தை போட்டு இவர் கடனை கட்ட முடியாத பிராடு என போட்டும் அவமானப்படுத்துகிறார்கள்.
கமிஷனருக்கு புகார்
இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு புகார்கள் சென்றன. வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் அளித்த புகாரில், நான் எம் ரூபி என்ற கடன் வழங்கும் செயலியை பதிவிறக்கம் செய்தேன். அதில் பான்கார்டு, ஆதார்கார்டு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்தேன்.
ஆபாச பேச்சு
ரூ 5000 கடன் வாங்கினேன். இதற்கு ஒரு வாரத்திற்கு ரூ 1500 வட்டியாக பிடித்துக் கொண்டு மிச்சம் ரூ 3,500 ஐ வழங்கினார்கள். என்னால் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் 45 க்கும் மேற்பட்ட செயலியில் கடன் பெற்று குடும்பச் செலவிற்கும் வட்டி கட்டவும் பயன்படுத்தினேன். ஒரு வாரம் வட்டி கட்டாவிட்டாலும் ரூ 100 க்கு 2 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசினார்கள்.
சீனா
மேலும் எனது போனில் உள்ள நண்பர்கள், குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார்கள் என கணேசன் புகார் அளித்தார். இதன் பேரில் சீனாவை சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நெட்வொர்க்கின் முக்கிய குற்றவாளி சீனாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.