திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
சென்னை: திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான உடன்படிக்கையும் கையெழுத்தானது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.
அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுடனான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அது போல் திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதையடுத்து நேற்றைய தினம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் மனிதநேய மக்கள் கட்சியும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தன.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
இந்த நிலையில் இன்றைய தினம் தொகுதிகளுக்கான எண்ணிக்கையை உறுதி செய்து அதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட இரு கட்சிகளும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தன. இதில் ஐயூஎம்எல்லிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் அந்த இரு தொகுதிகள் எவை, எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து ஓரிரு நாளில் தெரியவரும் என்றார்.