சென்னை தி.நகரில் ரூ.2 கோடி தங்கம் வைரம் கொள்ளை - போலீஸ் விசாரணை
சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நகை விலை நாளுக்கு உச்சத்திற்கு செல்லும் நிலையில் நகை கொள்ளையடிக்கப்படுவதும், தங்கம் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடையில் இருந்து 4 கிலோ தங்கம், 15 தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
தி. நகர் மூசா தெருவில் மொத்தமாக தங்க நகைகளை வியாபாரம் செய்யும் ஜூவல்லரி உள்ளது. குடியிருப்புப் பகுதியில் வீடு ஒன்றில், இந்தக் கடையை ராஜேந்திர குமார், தருண், பரிஸ் ஆகியோர் நடத்திவருகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற அவர்கள், இன்று காலையில் கடையைத் திறக்க ஊழியர்களும் கடையின் உரிமையாளர்களும் வந்தனர். அப்போது கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் ஆகியவை கொள்ளைப் போயிருந்தன.
அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்த கடையின் உரிமையாளர்கள், மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கடையிலிருந்து 2.125 கிலோ எடையுள்ள வைர நகைகள், 2 கிலோ எடையுள்ள தங்க நகைகள், அரை கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள் 15 ஆகியவை கொள்ளைப் போனதாக புகாரில் குறிப்பிட்டுள்ளது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் என கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிலோ கணக்கில் தங்கம் இருப்பதை அறிந்துதான் திட்டம்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதற்கான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்த போது, இரவில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து தங்க நகைகளை அள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
தி. நகரில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த வாரத்தில்
தி.நகரில் வயதான தம்பதியர்களை கட்டிப்போட்டு விட்டு 250 சவரன் தங்க நகைகள், பணம், கார் ஆகியவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர்களின் உறவினர்களே ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு பிஸ்கட்டாக மாற்றப்பட்டதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இன்றைய தினம் நகைக்கடையில் தங்கம், வைர நகைகள் தங்கக்கட்டிகளை கொள்ளையர்கள் திருடிச்சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.