2 நாட்களுக்கு மழை இருக்கும்.. பின்னர் படிப்படியாக குறையும்.. வானிலை மையம்
Recommended Video
சென்னை: தென் தமிழகம், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தற்போதைய காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அவரது பேட்டியிலிருந்து
காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இருப்பதால் தென் தமிழகம் புதுவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும் டெல்டா மாவட்டம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு நாளை முற்பகல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை ராமேஸ்வரம் 4 செ.மீ, பாம்பன் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும். அதன் பிறகு, மழையளவு படிப்படியாக குறையும்.
தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரை மழையளவு இயல்பு அளவை விட 23% குறைவு என்று புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று லேசான மழை காணப்பட்டது. ஆனால் பின்னர் அது நின்று போய் விட்டது.