அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
"நண்பனாக இரு துன்புறுத்துபவனாக இருக்காதே" என்கிற புத்தக வெளியீட்டு விழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கல்வி, ஒழுக்கம், ஒற்றுமை, மாணவிகளின் பாதுகாப்பு போன்ற மாணவர்கள் நலன் சார்ந்த நற்பழக்கங்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தபட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்றார்.
70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும், நாளை மறுநாள் முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். மேலும், மாணவர்களின் கல்விக்கென தனி தொலைக்காட்சியை விரைவில் முதல்வர் துவங்கி வைப்பார் என்றும், மொபைல் ஆப் மூலம் மின்னனு நூலக சேவை தொடங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். பொறியியல் படிப்பு மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்ததற்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
1 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாலியல் கல்வி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் . பள்ளி வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் அரைமணி நேரம் விளையாடும் வகையில் திட்டம் ஒன்றை தமிழக அரசு வகுத்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட பஸ் பாஸை பயன்படுத்தி, பள்ளி, மாணவ, மாணவியர் வரும் செப்டம்பர் மாதம் வரை அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணாக்கர்களுக்கு ஒழுக்கத்தையும் பழக்கவழக்கங்களையும் மேம்படுத்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் . வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க, மாணவர்கள் விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக பேசிய அவர், 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை விரிவுபடுத்தப்படும் . மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி. நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த, 2 ஆயிரத்து 583 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார்.