என்னது இவ்வளவுதானா.. அதிமுக ஆஃபரால் ஷாக்கில் தேமுதிக.. என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த்?
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக இணையாமல் காலதாமதம் செய்து வருவதற்கான, பின்னணிக் காரணங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிமுக, பாஜக, பாமக ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் வரும் லோக்சபா தேர்தலையொட்டி ஒரே அணியில் கரம் கோர்த்துள்ளன.
இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவை கொண்டு வருவதற்கு பாஜக மிகவும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
நலம் விசாரிப்பு
நேற்று முன்தினம் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தபோது, விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று, அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, தேமுதிக நிர்வாகி சுதீஷிடமும் தனியாக அவர் பேசினார். ஆனால் இதுவரை பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை.
பாமகவிற்கு இணையாக
இந்த கூட்டணியில் பாமகவிற்கு, 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் தருவதாக அதிமுக ஆஃபர் வழங்கியது. அதேபோன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தேமுதிக தரப்பு கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் விஜயகாந்த் உடல் நலம் குன்றிய நிலையில், அவரது கட்சிக்கு தமிழக அளவில் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதும் அதிமுக இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
2 தொகுதிகள்தான் தேமுதிகவிற்கு
அதிமுகவை பொறுத்தளவில், தேமுதிகவுக்கு வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வழங்க முடியும் என்று கூறி வருகிறது. வேண்டுமானால் ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படும் என்றும் கூறுகிறது. தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பது அதிருப்தி தான் என்றாலும், தேர்தலில் தோற்றாலும் கூட ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்து விடும் என்பதால், இந்த டீலிங் மீது தேமுதிக தலைமைக்கு சற்று ஆசை இருக்கத்தான் செய்கிறது.
பாஜகவிடம் பஞ்சாயத்து
இருந்தாலும் வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டால், தேமுதிகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக மக்கள் மத்தியில் எண்ணம் உருவாகும் என்பதால், பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் சீட்டுகளை பெற வேண்டும் என்ற முனைப்பில் அந்தக் கட்சி உள்ளது. ஆனால் பாஜக தலைமை எங்களுக்கே, ஐந்து சீட்டுகள் தான் கொடுத்துள்ளார்கள். இதில் நாங்கள் எங்கே உங்களுக்காக பரிந்து பேச முடியும், என்று கைவிரித்தபடி உள்ளது இதனால்தான் தேமுதிகவில் இழுபறி நீடித்து வருகிறது.