தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை... 5 மாவட்ட மக்கள் அனுபவிக்க தயாராகுங்கள்
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சென்னை, புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலையில் பல பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் அடுத்த 2 நாட்களுக்கான மழை பெய்வதற்கான சூழ்நிலை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். வரும் 9ஆம் தேதி திங்கட்கிழமை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவாகியுள்ளது.