ரெட்டிகாரு பலே பலே.. ஆந்திராவில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்ட "கூகுள் மேப்" திருடன்!
கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை அடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: இதுக்கெல்லாம் கூட கூகுள் மேப் உதவுதா?
தேனாம்பேட்டையில் போன அக்டோபர் மாசம் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை ஒன்று நடந்தது. 27 சவரன் நகையை திருடர்கள் அபேஸ் செய்துவிட்டார்கள்.
இதேபோல நுங்கம்பாக்கத்திலும் கவுசிக் என்ற டாக்டர் வீட்டில் 100 சவரனுக்கு மேல் கொள்ளை நடந்தது. எனவே ஆட்டைய போட்ட கொள்ளைகளை யார் செய்தது என்பது குறித்து தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.
2 பேர் கைது
இந்த நிலையில், ஐதராபாத்தில் வீடுகள் புகுந்த திருட்டு நடந்தது. இது சம்பந்தமாக அந்த மாநில போலீசாரும் விசாரணை நடத்தினார்கள். அதில் 2 பேர் சிக்கினர். அவர்கள் பெயர் சதீஷ் ரெட்டி, நரேந்திரா என்பது. அவர்களை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் தெரிந்தது, இவர்கள் தென்னிந்தியா முழுவதும் கைவரிசையை காட்டியவர்கள் என்பது.
கொள்ளை திட்டம்
கிட்டத்தட்ட 56 இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறார்களாம். அதில 2 இடம்தான் நம்ம தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் திருட்டு சம்பவமும்!! இது சம்பந்தமாக இருவரிடம் விசாரணை நடந்தது. அப்போது, பெங்களூர், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என இப்படி நகரங்களைதான் கொள்ளையடிக்க பிளான் பண்ணுவார்களாம். ஆனால் சிட்டியிலேயே யார் ரொம்ப பெரிய பணக்காரர் என்பதை கண்டுபிடிக்க கூகுள் மேப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த மேப்பில் வசதியானவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்பது தெரிந்து விடுமாம்.
பூட்டிய பங்களாக்கள்
பணக்கார ஏரியாவை மேப்பில் கண்டுபிடித்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ஏரியால் 2, 3 நாள் டேரா போட வேண்டியது, பிறகு அப்படியே சுற்றி சுற்றி வந்து பூட்டிய பங்களா எது என கண்டுபிடிக்க வேண்டியது, அதற்கு பிறகு கதவையோ, ஜன்னலையோ உடைத்து வேலையை காட்ட வேண்டியது. இப்படித்தான் கொள்ளையடிப்பார்களாம்.
கையில் கிளவுஸ்
ஆனால் நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் என்பது மாதிரி எந்த வீட்டுக்கு போனாலும் உஷாரா கையில் கிளவுஸ் போட்டு கொள்வார்களாம். கைரேகை பதிய கூடாது என்பதில் கவனமாக இருப்பார்களாம். இந்த தகவல்களையெல்லாம் ஹைதராபாத் போலீசார் சென்னை போலீசாருக்கு தெரிவித்தனர்.
120 சவரன்
இதையடுத்து, சென்னையிலிருந்து ஒரு தனிப்படை கிளம்பி ஹைதராபாத்துக்கு போய் அந்த 2 கொள்ளையர்களிடமிருந்து 120 சவரன் தங்க நகைகளை மீட்டு வந்தது. இனிமேல் தான் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்க போகிறார்கள். அப்போது மேலும் பல விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.