உரிய அனுமதி, பாதுகாப்பு வழங்காவிட்டால் 20,000 தண்ணீர் லாரிகள் ஓடாது.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை
Recommended Video
சென்னை: தண்ணீர் எடுத்து செல்ல முறையான அனுமதி வழங்காவிட்டால் சுமார் 20,000 லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள், தமிழக அரசை எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தை வாட்டி வரும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் பெரும் பங்கு வகிப்பது தண்ணீர் லாரிகளே. இந்நிலையில் தனியார் தண்ணீர் லாரிகள் மற்றும் டிரைவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் தண்ணீர் லாரி உாிமையாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியும்.. கர்நாடகம் திட்டவட்டம்
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க தலைவரான நிஜலிங்கம், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் தமிழக அரசு இதுவரை தங்களது கோரிக்கையை காது கொடுத்து கேட்கவில்லை. அவப்போது வாய்மொழியாக செய்கிறோம், செய்கிறோம் என சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாட்கள் கடந்து கொண்டே போகிறது. தற்போதைய கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், தண்ணீர் லாரி டிரைவர்களுக்கு போதிய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பகல் மற்றும் இரவு நேரங்களில் கற்களை வீசி லாரி டிரைவர்கள் மற்றும் தண்ணீர் லாரிகளை சரமாரியாக தாக்குகின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தண்ணீர் லாரிகளை இயக்க டிரைவர்கள் முன்வர மறுக்கிறார்கள்.
தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுமார் 2,000 தண்ணீர் லாரிகள் ஓடாமல் உள்ளதாக குறிப்பிட்டார்.
இரண்டொரு நாட்களில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார் நிஜலிங்கம். இந்த சந்திப்பில் தங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
ஏற்கனவே தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை தீர்க்க வழி தெரியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. தற்போது தண்ணீர் லாரி சங்கம் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளதால், மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.