தமிழகத்தில் தேசியக்கொடி ஏற்ற 20 ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதியில்லை! திமுகவை குற்றம்சாட்டிய அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் சுதந்திர தினத்தையொட்டி பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாவும், 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்பட உள்ளதாகவும் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video
இந்தியாவில் 75வது சுதந்திர தினம் வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சுதந்தி தினத்தை கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் அதன் தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி இந்த ஆண்டுகள் ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.
பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு!
அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இங்கோ, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத் தாமே சமூகநீதி காவலர் என்ற பட்டங்களைச் சூட்டிக் கொள்வதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள்.
சின்னசேலம், கள்ளக்குறிச்சி
சமீபத்தில் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி ஒரு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தை சொல்லி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருடன் நமது மாநில துணைத் தலைவர் எம்சி சம்பத், ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி நேரில் சந்தித்த பிறகு, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊராட்சி தலைவர் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற தீர்வு எட்டப்பட்டுள்ளது.
22 ஊராட்சிகளில் அனுமதி மறுப்பு
இந்நிலையில் தமிழக தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 24 மாவட்டங்களில் ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்குச் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
உபி, பீகார் பற்றி விவாதம்
இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர் தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதைச் சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது'' என விமர்சனம் செய்துள்ளார்.