"என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது".. பாமகவின் போராட்டம்.. ராமதாஸ் உணர்த்த வருவது என்ன?
20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி பாமகவினர் போராட்டம் நடத்தினர்
சென்னை: "என் உடல் மட்டும்தான் தைலாபுரத்தில் உள்ளது.. உயிரும், உள்ளமும் சென்னை போராட்டக்களத்தில் தான் உள்ளன" என்று போராட்டத்தில் உள்ள பாமகவினருக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து சொல்லி உள்ளார்!
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு முதற்கட்டமாக டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்திருந்தது.
அதன்படியே போராட்டத்தில் பங்கேற்பதற்காக வாகனங்களில் சென்னை வந்த பாமகவினரை போலீசார் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தினர்.
நெரிசல்
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் அங்கேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த பேரி கார்டுகள் கீழே தள்ளிவிட்டனர்.. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்தன.. அடுத்து, பெருங்களத்தூர் தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.. ரயில் மீது கற்களை வீசும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது... இதையடுத்து ஒரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது.
எதை உணர்த்துகிறது?
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பாமகவின் போராட்டம் எதை உணர்த்த வருகின்றது? வன்னிய சமூகத்துக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தவிருக்கிறது பாமக என்றபோதே, அரசு இதற்கு செவிசாய்க்கும் என்று எதிர்பார்த்தாராம் டாக்டர் ராமதாஸ்.. ஒருவேளை இதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், அதையே வரும் தேர்தலில் பயன்படுத்தி வாக்குகளாக மாற்றும் முயற்சியிலும் இருந்தாராம். ஆனால், கூட்டணியிலேயே இருந்தாலும் அப்படி எதுவுமே அதிமுக செய்யவில்லை.
அன்புமணி
அப்படியானால் அதிமுக கூட்டணியுடன் பாமக கூட்டணி தொடருமா? என்ற சந்தேகமும் எழுந்த நிலையில், இன்று போராட்டம் நடந்து வருவதை பார்த்தால், கூட்டணியில் நிறைய சந்தேகம் எழுந்துள்ளது.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பினாலும், அன்புமணிக்கு விருப்பமில்லை என்று ஒரு தகவல் ஏற்கனவே கசிந்தது.. அதேபோல, யாருடன் கூட்டணி வைத்தாலும் 50 சீட் கேட்டு வாங்கிவிடுவது என்றும் ஐடியாவில் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதெல்லாம் இனிமேல் நடக்குமா என்பது தெரியவில்லை.
இட ஒதுக்கீடு
இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது நியாயமான ஒன்று என்றே ஆளும் தரப்பு நினைத்தாலும், இதை மிக குறுகிய காலத்திற்குள் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமே.. காரணம், தேர்தல் நேரத்தில் தனி இடஒதுக்கீடு என்பது சுத்தமாக சாத்தியமில்லை.. பிறகு எதை முன்னிறுத்தி ராமதாஸ் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறார்? தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு சாத்தியமில்லை என்று மூத்த தலைவர் ராமதாசுக்கு தெரியாமல் இருக்குமா? அப்படியானால் மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேட முயல்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் டிமாண்ட் அவருக்கு உள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆயுதம்
அதேபோல, உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துவிடும் என்றும், வட பகுதிகளில் பாமக துணையே இல்லாமல் அதிமுக எளிதாக வென்றுவிடும் என்றும் அதிமுக கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும், அதிமுகவை நெருக்குதலுக்குள்ளாகவே தனி ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் ராமதாஸ் என்பது போலவே முணுமுணுக்கப்படுகிறது.
ஏன் அனுமதி வாங்கவில்லை?
இது எல்லாவற்றிற்கும் மேலாக, தொற்று பரவும் காலத்தில் எதற்காக அரசு போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு ஆதரவு தர வேண்டும்? பாஜகவின் வேல் யாத்திரை, திமுகவின் பிரச்சாரம் போன்றவற்றை தடுத்து நிறுத்தாதது ஏன்? பாஜகவை போலவே திமுக தரப்பும் கோர்ட்டிற்கு சென்று பிரச்சாரத்துக்கு ஏன் அனுமதி வாங்கவில்லை? பாமக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்தும் முன்னெச்சரிக்கையாக அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்பன போன்ற கேள்விகளும் சுற்றி கொண்டே இருக்கின்றன.
உணர்வார்களா?
மக்களைப் பொறுப்பாக இருக்க சொல்லும் அரசியல் கட்சிகள் இப்படி பொறுப்பே இல்லாமல் போராட்டங்களை நடத்துவதும், நோய்த் தொற்றை அதிகரிக்க காரணமாக அமைவதும் மக்களுக்கு நல்லதல்ல.. அதை அவர்கள் முதலில் உணர வேண்டும்.