2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..!
சென்னை: 2019 டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த இந்தியாவுமே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கோலம் கூட போராட்டக்காரர்களின் வியூகமாக மாறியதுதான் வரலாறு.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து துன்புறுத்தல்களுக்குள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வரும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்ட திருத்தம்.
ஆனால் அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய குடியுரிமை வழங்கப்பட்டால் தங்களது தனித்தன்மை பாதிக்கப்படும் என்கிற அபாய குரல் எழுப்பப்படுகிறது.
ஒரு கோலத்தை அழிக்க நினைத்தீர்கள்.. தமிழகமே போர்க் கோலம் வரைகிறது.. எடப்பாடி அரசுக்கு ஸ்டாலின் நன்றி!
துப்பாக்கிச் சூடுகள்
அஸ்ஸாமில் தொடங்கிய போர்க்குரல் நாடு முழுவதும் விரிவடைந்தது. வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 20 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் மங்களூருவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
மக்கள் திரள் போராட்டங்கள்
இப்போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் மட்டுமே நடத்தப்படவில்லை என்பதுதான் முக்கிய செய்தி. தேசம் முழுவதும் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்கான மக்களால் இப்போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சமூகப் போராட்டம்
தேசவிடுதலைப் போராட்ட காலங்களில் சிவில் டிஸ்ஒபிடீனியன்ட் என்கிற அரசுக்கு ஒத்துழையாமை தருகிற இயக்கம் எப்படியெல்லாம் நடைபெற்றது என்பதை நினைவுபடுத்துகின்றன இப்போராட்டங்கள் என்கின்றன அரசியல் ஆய்வாளர்கள். இந்த இன்றைய அரசுக்கு ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு சிறு துளியாகத்தான் சென்னை பெசன்ட்நகரில் 6 பேர் கோலம் போட்டு குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவிக்க முயன்றனர்.
கோலப் போராட்டம்
ஆனால் இந்த 6 பேரும் கோலம் போட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இது பெரும் கொந்தளிப்பாக மாறியது.
போராட்ட ஆயுதமான கோலம்
இதன் விளைவாக ஒட்டுமொத்த தமிழகமும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போடும் போராட்டமாக பட்டி தொட்டி எங்கும் பரவியது. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திய காலம் போய் சமூக அமைப்புகளின் போராட்டங்களின் பின்னால் அரசியல் கட்சிகள் சென்றாக வேண்டிய சரித்திரத்தை 2019-ன் இறுதி நாட்கள் கோலங்களின் மூலம் உருவாக்கி வைத்துள்ளன.