விஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் பிறையான தேமுதிக!
சென்னை: 2019ம் ஆண்டில் தேமுதிக மேலும் தேய்ந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது. போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலும் தோற்றது. விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் தோல்வியைத் தழுவினார்.
விஜயகாந்த் என்ற கடுமையான உழைப்பால் உருவான தேமுதிக ஜஸ்ட் லைக் தட் இந்த ஆண்டு மேலும் பல முக்கிய சரிவுகளை சந்தித்தது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா சட்டசபையில் தீர்மானம்!
விஜயகாந்த் மீதான நம்பிக்கை
விஜயகாந்த் என்பவரை நடிகராக மட்டும் பார்க்காத தமிழக மக்கள் அவர் அரசியலுக்கு வந்தால் பெரும் மாற்றம் ஏற்படும் என்று நம்பினர். 2005ம் ஆண்டில் மதுரையில் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்த விஜய காந்துக்கு மிகப்பெரிய ஆதரவை மக்கள் 2006 சட்டமன்ற தேர்தலில் வழங்கினர். 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று அசத்தினார். 2009 நாடாளுமன்ற தனித்து போட்டியிட்டு 10 சதவிதத்திற்கு மேல் வாக்குகளை வென்றார்.
2016 சட்டமன்ற தேர்தல்
2011ல் அதிமுகவினரே விஜயகாந்துடன் கூட்டணி வைத்தால் வெற்றி உறுதி என்று ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர் . அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி தலைவர் ஆனார். 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் எடுத்தமுடிவு தேமுதிகவை மட்டுமல்ல தமிழக அரசியல் களத்தையும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கியது.
விஜயகாந்த்
2016ல் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் ஒருவேளை இந்நேரம் திமுகதான் ஆட்சியில் இருந்திருக்கக்கூடும். சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே 2016 தேர்தலில் திமுக பலதொகுதிகளில் தோற்றுப்போனது. இதற்கு காரணம் விஜயகாந்த்தின் மக்கள் நலக்கூட்டணி. இதில் தேதிமுக பலத்த அடி வாங்கியது. 2.4 சதவீத வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தது. அடுத்த அடியாக விஜயகாந்த்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
அதிமுகவுடன் கூட்டணி
2006, 2011, 2016 ஆகிய மூன்று சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர் விஜயகாந்த். அவரது இயக்கம் 2016க்கு பிறகு அப்படியே மாறிப்போனது. கட்சியில் இருந்து பலர் விலகி மாற்றுக்கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் வழிகாட்டுதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக.
சர்ச்சையாக மாறியது
இந்த கூட்டணியும் லேசில் அமையவில்லை. முதலில் திமுகவுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன்பிறகு தான் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, ஒரே நேரத்தில் இருவருடனும் மாறி மாறி பேரம் பேசி அதிர வைத்தது. இதனால் தேமுதிக மீது மக்கள் வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் காற்றில் பறந்து போனது.
சுதீஷ் தோல்வி
தேமுதிகவுக்கு அதிமுக நான்கு இடங்களை மட்டுமே ஒதுக்கியது. இந்த நான்கில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் படுதோல்வி அடைந்தார். இதேபோல் வடசென்னை, விருதுநகர், திருச்சி ஆகிய மற்ற மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. விஜயகாந்த்தே வந்து கஷ்டப்பட்டு பிரச்சாரம் செய்தும் கூட தேமுதிக தேறவில்லை.
மோசமான ஆண்டு
அடுத்து வந்த சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் வேலூர் லோக்சபா தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு தீவிர பிரச்சாரம் செய்து அந்த கட்சியின் நம்பிக்கைகுரிய கூட்டணியாக மாறியது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்குத் தேவையான இடத்தை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாகியது தேமுதிக. 2019ம் ஆண்டு தேமுதிகவுக்கு அரசியல் ரீதியாக மோசமான ஆண்டு என்பதில் சந்தேகமே இல்லை. விஜயகாந்த் ஆக்டிவாக திரும்பும் வரை இந்த கட்சியின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.. காரணம்.. விஜயகாந்த்தைத் தாண்டி அந்தக் கட்சியில் இன்னும் நல்ல தலைவர் என்று யாருமே இல்லை என்ற எதார்த்தம்தான் காரணம்.