2021 எப்போ பிறக்கும்.. ஆர்வத்தோடு காத்திருக்கும் மக்கள்.. காரை எடுத்துகிட்டு விர்ருன்னு கிளம்ப ரெடி!
சென்னை: கொரோனா நோய் பரவல் இந்த உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது. வாரம் ஒரு சுற்றுலா சென்றவர்களை கூட, பக்கத்து கடைக்கு கூட போலீஸ் பெர்மிஷன் கேட்டு போகும் நிலைக்கு தள்ளியது கொரோனா.
வீடுகளுக்குள்ளேயே சிறைபட்டனர் மனிதர்கள். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். பிறரோடு இணைந்து வாழ்வது அவனுக்கு இயல்பானது. ஆனால், கொரோனா அந்த அடிப்படை இயல்பை கூட முற்றிலும் மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளியது.
இதன் விளைவு.. மன அழுத்தம், விரக்தி, கோபம்.. என மனரீதியாகவும், ரத்த அழுத்தம், உடற் பயிற்சி இல்லாததால் உடல் பருமன் என உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
சுற்றுலா தலங்கள் நிலவரம்
கொரோனா ஊரடங்கு இந்தியா உட்பட பல நாடுகளிலும் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தாலும், இன்னும் அதிகம் திறக்கப்படாத துறை, சுற்றுலா. நம்ம ஊர் மெரினா கடற்கரையை கூட இன்னும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடவில்லையே. இதுபோதாது என்று, ஐரோப்பாவில் கொரோனா 2வது அலை காரணமாக தளர்வுகள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில்தான், கொரோனா தடுப்பூசி பற்றி உலகம் முழுக்க நல்ல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக விடியும் என்ற நம்பிக்கையை விஞ்ஞான உலகம் உறுதிபட சொல்கிறது. டிசம்பர் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் துவங்கி விடும் என்ற நம்பிக்கையுள்ளது.
இயல்பு நிலையில் உலகம்
எனவே, அடுத்து என்ன? 2021ம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஒரே எண்ணம், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் எழுந்துள்ளது. தடுப்பூசி அமலுக்கு வந்த பிறகு கிட்டத்தட்ட மார்ச் மாதத்திற்கு பிறகு, இந்த உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதலில் பெரும் ஏற்றம் காணப்போகும் துறை சுற்றுலாத் துறை என்கிறார்கள் அந்த துறை வல்லுநர்கள். இதற்கு காரணம் இருக்கிறது.
அடக்கி வைத்த ஆசைகள்
இத்தனை மாதங்களாக அடக்கி வைத்த ஆசை அனைத்தையும், தனது மன சோர்வு அனைத்தையும் மனித குலம் சுற்றுலா வழியாகத்தான் தீர்த்துக் கொள்ளப்போகிறது. கோவாவோ, ஊட்டியோ, புதுவையோ, குற்றாலமோ அல்லது கன்னியாகுமரியோ, அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பப் போகிறது. கொரோனா காலத்தில் பலரும் சொந்த வாகனங்களை வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் பஸ், ரயிலை நம்பாமல் சுற்றுலா தலங்களுக்கு தங்கள் சொந்த வாகனங்களில் படையெடுப்பார்கள் என்கிறார் ஒரு சுற்றுலா துறை வல்லுநர்.
உலகம் முழுக்கவே மக்கள் மனநிலை
உலகம் முழுக்கவே பல ஊடகங்களும் அந்தந்த நாடுகளின் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் குவிவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. விமானங்கள் இயக்கம் நிறுத்தி வைத்து ஓராண்டு கழித்து ஓபன் ஆகும் என்பதால், விமான டிக்கெட்டுகள் முழுக்க விற்று தீரும்.
சிறிதளவு விதிமுறையை தளர்த்துவது கூட வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருக்கும்.
சுற்றுலா தலங்களை தேடும் மக்கள்
2020ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா உலக சுற்றுலா அமைப்பால் கண்காணிக்கப்பட்ட 217 சுற்றுலா தலங்களில் 115 இடங்கள் தங்கள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம். இப்போதே இப்படி என்றால், தடுப்பூசி வந்த பிறகு, அனைத்து கட்டுப்பாடுகளும் தளரும். உலகளாவிய ஹோட்டல் புக்கிங் விகிதங்கள் ஏப்ரல் மாதத்தில் 22% ஆக இருந்த நிலையில், ஆகஸ்டில் 47% ஆக இரு மடங்காக அதிகரித்தன. இதற்கு காரணம், மக்கள் பயணம் செல்ல ஆர்வமாக உள்ளனர். கட்டண ஒப்பீட்டு வலைத்தளமான ஸ்கைஸ்கேனரின் கருத்துப்படி, இப்போதே பல சுற்றுலா தலங்கள் குறித்த தேடுதல் அதிகரித்துள்ளதாம். எனவே, நம்பிக்கை கொள்வீர்.. 2021ம் ஆண்டு, சுற்றுலாவுக்கான பொற்காலமாக மாறும்.