ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021: எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்
2021ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு ஆமோகமான பலன்கள் கிடைக்கும், யாருக்கு யோகமும் அதிர்ஷ்டமும் தேடி வரும் என்று பார்க்கலாம்.
சென்னை: கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து பல கோடி பேர் மீண்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டிலாவது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பார்களா? மக்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிறக்கப் போகும் புத்தாண்டிலாவது நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குமா? வரும் ஆண்டிலாவது திருமணம் நடைபெறுமா என்று 90 கிட்ஸ் ஆதங்கத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை தருகிறது 2021 ஆங்கில புத்தாண்டு ராசி பலன். மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை 6 ராசிகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
புத்தாண்டு பலன் சொல்லும் போது நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்க்க வேண்டும். ஆண்டு கோள்கள் குரு, சனி, ராகு கேதுவின் சஞ்சாரம் எந்த ராசியில் இருக்கிறது என்று பார்த்து அந்த கிரகங்களின் சேர்க்கை பார்வை எப்படி இருக்கிறது எந்த ராசிக்கு கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.
2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மார்கழி 17ஆம் தேதி பிறக்கிறது. மேஷம் ராசியில் செவ்வாய், ரிஷபம் ராசியில் ராகு, சந்திரன் கடகம் ராசியிலும் விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரம் எந்த ராசிக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, பிறக்கப் போகும் ஆங்கில புத்தாண்டில் உங்களுடைய ராசிக்கு அமோகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. ராகு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றன. குரு சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். வேலையில் சின்னச்சின்ன குடைச்சல்கள் இருந்தாலும் சமாளித்து வேலையை தொடர்ப்பாருங்கள். புதிய வேலை மாற நினைக்கக் கூடாது. தொழில் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்ய நினைக்க வேண்டாம். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு நிறைய நன்மைக நடைபெறும். இந்த ஆண்டு மேஷம் ராசிக்காரர்கள் கால பைரவரை வணங்க வேண்டும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கி வர பாதிப்புகள் நீங்கும். கடன் பிரச்சினை குறையும்.
ரிஷபம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே 2021ஆம் ஆண்டில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்க ராசிக்குள் ராகு, ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்களுடைய ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் நிறைய தன வரவு இருக்கும். கடன் பிரச்சினையை சமாளிப்பீர்கள். காதல் மலரும் காலம் என்பதால் எதையும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வது அவசியம். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும். ராகு பகவானை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை புற்றுக்கு பால் ஊற்றுங்கள். துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றனர். 12ஆம் வீட்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். பணம் விசயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்த முடிவு எடுக்கும் முன்பாகவும் அனுமனை வழிபடவும். வேலையில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அமாவாசை நாட்களில் முதியவர்களுக்கு தயிர்சாதம் அன்னதானம் செய்வது நல்லது.
கடகம்
கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2021ஆம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சனியும் குருவும் ஏழாம் வீட்டிலும் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பிறக்கப் போகும் புத்தாண்டு சுபமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய நல்ல காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். வீட்டில் திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். இந்த ஆண்டு நீங்கள் குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வணங்கலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வணங்கி வர நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் சனியும் குருவும் இணைந்து சஞ்சரிக்கின்றன. பத்தாம் வீட்டில் ராகு நான்காம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் பண வருமானம் நிறைவாக இருக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இந்த ஆண்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும் கவனம் தேவை. உடல் நலனில் கவனம் தேவை. நோய்கள் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை. பேச்சில் நிதானமும் விட்டுக்கொடுத்தலும் அவசியம். எதையும் முகத்திற்கு நேராக வெளிப்படையாக பேசி கெட்டப்பெயர் வாங்கிக்கொள்ள வேண்டாம். நீங்கள் வியாழக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்வது நல்லது. நோய்கள் நீங்க வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்வந்திரி பகவானை வணங்கலாம்.
கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிக்கு இந்த ஆண்டு முழுவதும் ராகு ஒன்பதாம் வீட்டிலும் கேது மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிப்பார். குருவும் சனியும் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். 2021 ஆண்டு அற்புதங்கள் நிகழ்த்தப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. குருவினால் உங்க ராசிக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குழந்தைகளினால் பெருமை கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். திருப்பதி ஏழுமலையானை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.