2021: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மே.வ. தேர்தல்-நெருப்பாற்றில் நீந்தும் அரசியல் கட்சிகள்!
சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2021-ம் ஆண்டு அக்னி பரீட்சை காலமாக இருக்கப் போகிறது. பாஜகவால் வெல்ல முடியாது என்கிற நிலை இருக்கும் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல்களை அந்த கட்சி எப்படி எதிர்கொண்டு சாதிக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகும். அதேநேரத்தில் ஒவ்வொரு மாநில கட்சிகளுக்குமே இந்த தேர்தல் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பதாகவே தகிக்கவும் போகிறது.
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் அதிமுக, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. ஜெயலலிதா என்கிற மாபெரும் ஆளுமை இல்லாமல் இந்த தேர்தலை அதிமுக எதிர்கொள்கிறது.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்து அதிமுக தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக.
அதிமுக- பாஜக கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜக 60 இடங்களை கேட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அதிமுக தரப்பு 20 இடங்கள் வரை தயாராக உள்ளது. அதிமுகவின் முடிவை பொருட்படுத்தாமல் தாம் போட்டியிட விரும்பும் இடங்களை பாஜக எடுத்துக் கொள்ளும். அதுவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள தொகுதிகளை தன் வசமாக்கிக் கொள்ளும் என்றே தெரிகிறது.
வெல்ல துடிக்கும் பாஜக
2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று பாஜக 4 இடங்களில் வென்றது. இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 5 எம்.எல்.ஏக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. இதன்மூலம் தமிழகத்திலும் தாமரை மலர்ந்துவிட்டது என்கிற பெருமிதத்தை பேச விரும்புகிறது பாஜக. தமிழ்நாட்டில் பாஜக இதை சாதித்துவிட்டாலேயே மிகப் பெரிய எதிர்பார்ப்பு வந்துவிடும் என்றும் கணக்குப் போடுகிறது.
திமுக- அதிமுக
மேலும் ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்கின்றன அதிமுக- திமுக. திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. அதிமுகவின் எதிர்காலம் என்பதே தேர்தல் வெற்றியில்தான் இருக்கிறது. இதே நிலைமை அப்படியே திமுகவுக்கும் பொருந்தும். ஆகையால் திமுக- அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இந்த தேர்தல் வாழ்வா சாவா நிலைமதான்.
புதுவை தேர்தல்
புதுச்சேரியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் வலிமையாக உள்ளன. இம்முறை அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. புதுவையில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் உள்ளது. புதுவையில் காங்கிரஸ் அரசை வீழ்த்தினால் அதிமுக தலைமையிலான அரசில் அங்கம் வகித்துவிடலாம் என்பதும் பாஜகவின் எண்ணம். இதன் மூலமாக கர்நாடகாவை தொடர்ந்து மற்றொரு தென்மாநிலமான புதுவையிலும் அதிகாரத்தில் அமர்ந்துவிட்டோம் என்பது பாஜகவின் வியூகம்.
பாஜக பகீரத முயற்சி
கேரளாவில் இடதுமுன்னணி ஆட்சியில் உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை இடதுமுன்னணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்ணி ஆகியவைதான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வந்தன. அதாவது தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி அமைப்பது போல. அதேநேரத்தில் கேரளாவில் இடது முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு பெரும் சக்திகளுடன் மல்லுக்கட்டி முன்னேற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது. இதனால் தமது தீவிரமான இந்துத்துவா நிலைப்பாட்டில் தளர்வுகளை கடைபிடிக்கிறது பாஜக. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினரை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதை உதாரணமாக சொல்லலாம். கடும் போக்கு இந்துத்துவா கொள்கை கேரளாவில் எடுபடாது. இதனால் காங்கிரஸைப் போல நெகிழ்வான இந்துத்துவா போக்குடன் தேர்தல் களத்தை எதிர்கொள்ளப் போகிறது பாஜக. தமிழ்நாட்டை போல கேரளாவில் ஒரு சில இடங்களிலாவது வென்று கேரளாவில் அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.
இடதுசாரிகள்- காங்.
இன்னொரு பக்கம் கேரளாவில் ஊழல் புகாரில் சிக்கி தத்தளிக்கிறது இடதுமுன்னணி. காங்கிரஸுக்கும் தேசிய அளவில் வலிமையான தலைமை இல்லை. அதேநேரத்தில் இடதுசாரி, காங்கிரஸின் பாணியிலேயே பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் இடதுசாரிகள் அல்லது காங்கிரஸ் ஆகிய இரண்டின் ஏதே ஒரு கட்சியின் இடத்தை பாஜக ஆக்கிரமிக்கலாம். ஆகையால் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கும் நெருப்பாற்றில் நீந்துகிற நிலைமைதான்.
பாஜகவின் காவி கொடி
மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக என அனைவரு தனித்தனியே நின்றதால் பாஜக கணிசமான இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த மும்முனைப் போட்டி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியின் விருப்பம். தங்களுக்கான வாக்குகள் ஆளுக்கொரு திசையில் என மூன்றாக சிதறி பாஜக எளிதாக வெல்வதைவிட சிதறும் வாக்குகளை கட்டுப்படுத்துவது என்பதுதான் மமதாவின் வியூகம். அதேநேரத்தில் மேற்கு வங்க பாஜகவுக்குள் நிலவும் உட்கட்சி பூசல் பெரும் தலைவலியாக உள்ளது. இதனால் மேற்கு வங்க கோட்டையில் காவி கொடி பறக்குமா? அல்லது ஆகப் பெரும் சரித்திரம் படைக்குமா? என்பது எதிர்பார்ப்புக்குரியது.
என்னவாகும் திரிணாமுல்?
அத்துடன் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்துவது எளிதாக இருக்காது. திரிபுராவில் நிகழ்ந்தது போல ஆட்சி பாஜகவின் கைகளுக்குப் போனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மிகப் பெரும் கேள்விகுரியதாகிவிடும்.
அஸ்ஸாம் தேர்தல்
2021-ல் சட்டசபை எதிர்கொள்ளும் மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. காங்கிரஸிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்த பாஜக அதனை தக்க வைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும். ஆனால் குடியுரிமை சட்ட திருத்தம் போன்றவை, காங்கிரஸ்-இடதுசாரிகள்- மாநில கட்சிகள் வலிமையான கூட்டணி என்பதை பாஜகவின் தொடர் சாதனைக்கு செக் வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் ஒவ்வொரு கட்சிக்குமே 2021-ம் ஆண்டு மிகப் பெரிய சவாலாக, நெருப்பை மடியில் கட்டுக் கொண்டு இருப்பதாகவே இருக்கும்.