2021 சட்டசபை தேர்தல்: அதிமுக 3வது முறையாக ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்குமா?
அதிமுக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
சென்னை: நான் இல்லாவிட்டாலும் எனக்குப் பின்னாலும் 200 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என்று சட்டசபையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கம்பீரமாக பேசினார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. அவரது மரணத்திற்குப் பிறகு கட்சியில் சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் ஆட்சியை விட்டுக்கொடுக்காமல் நடத்தி வருகின்றனர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும். 2021 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சைலண்ட் ஆக செய்து வருகிறது அதிமுக. நடைபெறப்போகும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து வரலாற்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அதிமுக தொண்டனின் மனதிலும் எழுந்துள்ளது.
கொரோனா பரவலால் தேர்தல் நடைபெறுமா என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியோடு தேர்தலை நடத்தி முடிப்பார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு தயாராகியே வருகிறது. அதே போல தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சியினர் தங்களின் தேர்தல் பணிகளை பல கட்டங்களாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது ஆசை மட்டுமல்ல லட்சியமும் கூட. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்தார். 30 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடையவே, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஜெயலலிதா ஆசியோடு ஆட்சி செய்து வருகிறார். ஓ. பன்னீர்செல்வமும் துணை முதல்வர் பதவியில் அமர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பணியையும் கவனித்துக்கொள்கிறார்.
கடந்த மார்ச் மாதம் சொல்வோம் வெல்வோம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் கனவை நினைவாக்குவோம்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கனவுப்படி, அடுத்த 100 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி செய்யும் என்று நம்பிக்கையோடு பேசியுள்ளார்.
கொரோனா- சென்னையை மீண்டும் மீண்டும் பீதிக்குள் ஆழ்த்துவதா? ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கண்டனம்
தொண்டர் பலம் கொண்ட அதிமுக
பிற மாநிலங்களைப் போல இல்லை தமிழ்நாடு. அதிமுகவிற்கு பலமே தொண்டர்கள்தான். அது ரத்தத்தில் கலந்தது. அதனால்தான் ரத்தத்தின் ரத்தமே என்று அழைப்பார் எம்ஜிஆர். எந்த ஒரு உண்மையான அதிமுக தொண்டனும் மறந்தும் கூட திமுகவிற்கு ஓட்டு போட நினைக்க மாட்டான். அதே கட்டுப்பாடுதான் சின்னச் சின்ன சலசலப்புகள் ஏற்பட்டாலும் கட்சி உடையாமல் இருக்க காரணமாக இருக்கிறது.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி
காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின்
புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அடிப்படை கட்டமைப்புகள் வலுவாக உள்ளதால் அதிமுக எதிர்காலம் என்பது வீழ்ச்சி அடையாது. வலுவான தலைமையும், தொண்டர்களின் பலமும் அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கிறது.
அசைக்க முடியாத சக்தி எம்ஜிஆர்
தொடர்ந்து 1977ஆம் நடந்த சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றது அதிமுக. முதல்வர் நாற்காலியில் அசைக்க முடியாத சக்தியாக அமர்ந்திருந்தார் எம்ஜிஆர். பிரச்சாரத்திற்கு செல்லாமலேயே ஜெயித்த ஒரே தலைவர் எம்ஜிஆர்.
ஜெயலலிதா தலைமையை ஏற்ற தொண்டர்கள்
1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் 1989ஆம் ஆண்டு ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது. தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை ஜெயலலிதா நிரூபித்தார்.
மிகப்பெரிய கட்சி அதிமுக
ஜெயலலிதா தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது ஜெயலலிதாவின் மகத்தான அரசியல் சாதனையாகும்.
200 ஆண்டுகள் இருக்கும் அதிமுக
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் காணும் பக்கம் எங்கும் எதிரிகளே காணோம் என்று பேசினார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார். முதல்வரான பின்னர் சட்டசபையில் பேசிய அவர், நான் இல்லாவிட்டாலும் எனக்குப் பின்னாலும் 200 ஆண்டுகள் அதிமுக இருக்கும் என்று கம்பீரமாக பேசினார் அதே ஆண்டிலேயே உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார்.
அசைக்க முடியாத சக்தி
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் கட்சி, ஆட்சியில் குழப்பங்கள் வந்தாலும் அது எளிதில் சரியானது எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வம் என்ற இரட்டை தலைமையின் கீழ் 5 ஆண்டுகள் நிறைவு பெறப்போகிறது. 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தாலும் உள்ளாட்சி தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தது. அதே பாய்ச்சலோடு சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
சசிகலா விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு போன சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று தகவல்கள் பரவினாலும் அதிமுகவில் சசிகலாவிற்கு அனுமதியில்லை என்றே பல அமைச்சர்களும் கூறி வருகின்றனர். கட்சியைக் கைப்பற்ற சசிகலா காய் நகர்த்துவாரா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. மன்னார்குடி குடும்பத்தினை ஒருபோதும் கட்சிக்குள் மீண்டும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில்தான் அதிமுகவினரும் இருக்கிறார்களாம்.
மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்குதா
அதிமுக ஆட்சியின் மீது எதிர்கட்சியினர் விமர்சனத்தை வைத்தாலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அலை அதிமுகவிற்கு இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. கொரோனா நிவாரண பணி என்ற பெயரில் உணவுப்பொருட்களும், பணமும் தொகுதி வாரியாக, ஊர் ஊராக பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது. சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களும் இறங்கி வேலை செய்கின்றனர்.
பொன்விழா காணும் கட்சி
திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. பொன் விழா காணப்போகும் தங்கள் கட்சியில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் பெருமிதத்துடன் கூறுகின்றனர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினால் அது வரலாற்று சாதனையாக மாறும் என்பது நிச்சயம்.